என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

பாடல் (64) (2020) உண்மை வாய்மை மெய்ம்மை மூன்றும் !

-------------------------------------------------------------------------------------

2020 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை !

கண்ணில் தெரியும் கதிரவன் உண்மைகண்டது 

உரைத்தல் “வாய்மையம்மா !

-------------------------------------------------------------------------------------

                   

     உண்மை வாய்மை மெய்ம்மை மூன்றும்

      ....ஒன்றென எண்ணல் சரியாகா !

                   

     கண்ணில் தெரியும்  கதிரவன் உண்மை”,

      .....கண்டது உரைத்தல் வாய்மையமா !

                  

      மண்ணுயிர் வாழ்க்கை  கதிரவன் அருளால்,

      .....மறந்திடத் தகுமோ இதுமெய்ம்மை” !

                   

     திண்ணிய வாய்மைத் திறமிகு வழியில்,

      .....திருக்குறள் போற்றி ஒழுகிடுவோம் !

 

                   

     வள்ளுவ முனிவர் வாய்மையைச் சொல்லி,

     .....வடித்தார் பத்துத் திருக்குறளை !

                   

     தெள்ளிய நல்லுரை அவரது சொல்லுரை,

     .....தெவிட்டாத் தேனது பருகிடுவோம் !

                   

     ஒள்ளிய வாய்மை யாதெனில் தீமை

     .....ஒன்றும் பயவா உரையாமே !

                   

     புள்ளியர் சொல்லும் பொய்மையும் வாய்மை

     .....புரைதீர் நன்மை பயக்குமெனின் !

 


     உடலைக் கழுவிடத் தண்ணீர் வேண்டும் !

     .....உளத்தைக் கழுவிட வாய்மை வேண்டும் !

                   

     அடல்மிகு வாய்மை அளித்திடும்  நன்மை,

     .....அமைதியை அழித்துத் தீய்த்திடும் பொய்ம்மை !

                   

     மடல்விரி தாமரை மணமாய் வள்ளுவம்

     .....மயக்குது மனதைப் பருகுவம் வாரீர் !!

                   

     வடலியென் பாடலில் வளங்குறை வென்றால்,

     .....வயமா நீவிர் பொறுத்தருள் வீரே !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

 {28-03-2022}

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக