என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

கன்னல் கனியிதழே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னல் கனியிதழே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மே, 2022

பாடல் (19) (1968) கன்னல் கனியிதழே! கட்டழகே ! காவியமே !

=================================================

  ஒரு திரைப் படத்தில்  இடம்பெற்ற காட்சியை 

அடிப்படையாக

வைத்துப் புனையப் பெற்ற கவிதை !  

                      (1968-ஆம் ஆண்டு எழுதப்பெற்ற கவிதை)

=================================================

 

 கன்னல்       கனியிதழே !   கட்டழகே !        காவியமே !

மின்னல்      கொடியழகே !  மாமயிலே !       மேகலையே !

பின்னல்       கருமுகிலின்  பெட்டகமே !       பேரழகே !  

சன்னல்       கதவருகே     சாய்ந்திருக்கும்     சண்பகமே !

 

காதல்         கணைவீசிக்   கதைபேசும்        காரிகையே !

கூதல்         பருவத்துக்    குளிருடலை       வாட்டுதடி !

மோதல்       விலக்கிவிடு ! முல்லைநகை      காட்டிவிடு !

நோதல்       அழகாமோ ?   நூலிடையே !      தாளையெடு !

 

வெள்ளைப்   பல்வரிசை !     விரிந்தசுளைக்    கொவ்வையிதழ் !

கள்ளைச்     சுமந்திருக்கும்    காந்தட்பூ        வெண்டைவிரல் !

பிள்ளை      மழலைமொழி   பேசுமிரு         கயல்விழிகள் !

கொள்ளை    எழில்பெருகும்   கோபுரமே        தாளையெடு !

 

பட்டுப்        புடவைதனில்    பத்துநிறம்        எட்டுவகை !

கட்டுக்        கணுக்கரும்புக்   கைகளுக்கு       நான்குவளை !

மொட்டுக்     கதலியுறு        முல்லைவடம்    மூன்றுவகை !

கொட்டிப்      பூமகளே !       குவித்திடுவேன் !  தாளையெடு !

 

அள்ளி        அலங்கரிப்பேன் !  ஆரணங்கே !    ஆயிழையே !

துள்ளித்       துடித்துவிழும்     தூயவிழி        மான்மறியே !

வெள்ளிக்      கதிர்நிலவே !     விண்ணுலவும்   தாரகையே !

வள்ளிக்       கிழங்கேயென்    வைரமணி        நீயிலையோ ?

 

கரும்புச்       சாறெடுத்துக்     கற்கண்டு,        தேன்கலந்து !

அரும்பும்      இதழாக         ஆக்கியஎன்       பொற்சிலையே !

விரும்பும்     பொருள்யாவும்   விடிந்தவுடன்     தந்திடுவேன் !

இரும்புத்      தாள்திறவாய் !   என்னுயிரே !      தாளையெடு !

 

-------------------------------------------------------------------------------------------------- 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

[திருவள்ளுவராண்டு: 2053,மேழம் (சித்திரை) 20]

{03-05-2022}

--------------------------------------------------------------------------------------------------