உள்ளத்தின் கருத்துகளைப் பிறருக்கு உணர்த்துகின்ற
------உயர்ந்ததொரு கருவிதான்
மொழியென்பர் உணர்வீரே ! !
உள்ளூரும் சிந்தனையை உரைப்பதற்கு
அன்னைமொழி
------உதவுதல் போல பிறமொழிகள் உதவாது அறிவீரே
வள்ளுவத்தை நமக்களித்த நல்லறிஞன் தமிழன்றி
------வேற்றுமொழி அறிந்தவனா விளம்பிடுக மும்மொழியீர் !
கள்ளமனம் உடையோரின் கனவுதான் மூன்றுமொழி !
------கருத்துடனே ஆய்ந்திடுக ! கனித் தமிழின் பிள்ளைகளே !
ஒற்றை மொழியறிந்து உயர்ந்தவர்கள் ஈங்கு இலையா ?
------உயர்வடைய மும்மொழிதான் உனக்கிங்கு
அகத்தியமா ?
கற்கின்ற கல்விதான் உயர்வுதரும், மொழியன்று !
------கரிசனமாய் மும்மொழியைத் திணிப்பவர்கள்
யாரையா ?
வெற்றுரையால் நெல்விளையா !
வீடணர்கள் நோக்கமென்ன ?
------விளையாட்டு அரசியலால் வீணாகும்
நம்வாழ்வு !
சற்றேனும் பொறுப்பின்றிச் சாற்றுவதேன்
மும்மொழியை
------சந்துமுனை அரசியலைச் சரிக்கும் நாள் எந்நாளோ ?
ஒற்றைமொழிக் கல்விதந்து உயர்கிறது பன்னாடு !
------உருப்படா மும்மொழியால் வீழ்கிறது நம்நாடு !
எற்றைக்கு ஈங்குஉளோர்
விழிப்படைவர் தெரியவிலை !
------எம்மக்கள் என்றைக்கு மீண்டெழுவர்
புரியவிலை !
குற்றம்செய் உணர்வின்றிக் கோலோச்ச முனைகின்றீர் ! !
------குறுமதியீர் ! பதவிக்கும் பணத்திற்கும் அலைவது ஏன் ?
அற்றம் சரியன்று ! அறிவிலிகாள் !
திருந்திடுவீர் !
------அடுத்துவரும் தலைமுறையை அழிப்பதற்குத் துணியாதீர் !
வை . வேதரெத்தினம்
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ
(21-05-2025)
-------------------------------------------------------------------------------------------