என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

உள்ளத்தின் கருத்துகளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளத்தின் கருத்துகளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மே, 2025

பாடல் (76) அடுத்து வரும் தலைமுறையை அழிப்பதற்குத் துணியாதீர் !

உள்ளத்தின் கருத்துகளைப்  பிறருக்கு உணர்த்துகின்ற 

------உயர்ந்ததொரு    கருவிதான்  மொழியென்பர்  உணர்வீரே  ! !

உள்ளூரும் சிந்தனையை உரைப்பதற்கு அன்னைமொழி

------உதவுதல் போல பிறமொழிகள் உதவாது  அறிவீரே   

வள்ளுவத்தை நமக்களித்த நல்லறிஞன்  தமிழன்றி

------வேற்றுமொழி அறிந்தவனா  விளம்பிடுக மும்மொழியீர் !  

கள்ளமனம் உடையோரின்  கனவுதான் மூன்றுமொழி !   

------கருத்துடனே ஆய்ந்திடுக !  கனித் தமிழின் பிள்ளைகளே  !

 

ஒற்றை மொழியறிந்து  உயர்ந்தவர்கள் ஈங்கு இலையா ?

------உயர்வடைய மும்மொழிதான் உனக்கிங்கு அகத்தியமா ?

கற்கின்ற  கல்விதான் உயர்வுதரும், மொழியன்று !

------கரிசனமாய் மும்மொழியைத் திணிப்பவர்கள் யாரையா ?

வெற்றுரையால் நெல்விளையா ! வீடணர்கள் நோக்கமென்ன ?

------விளையாட்டு அரசியலால் வீணாகும் நம்வாழ்வு  !

சற்றேனும் பொறுப்பின்றிச் சாற்றுவதேன்  மும்மொழியை

------சந்துமுனை அரசியலைச் சரிக்கும் நாள்  எந்நாளோ ?

 

ஒற்றைமொழிக்  கல்விதந்து உயர்கிறது பன்னாடு !

------உருப்படா மும்மொழியால் வீழ்கிறது நம்நாடு !

எற்றைக்கு ஈங்குஉளோர் விழிப்படைவர்  தெரியவிலை  !

------எம்மக்கள் என்றைக்கு மீண்டெழுவர் புரியவிலை  !

குற்றம்செய்  உணர்வின்றிக் கோலோச்ச முனைகின்றீர்  !  !

------குறுமதியீர் !  பதவிக்கும் பணத்திற்கும் அலைவது ஏன் ?

அற்றம் சரியன்று ! அறிவிலிகாள் ! திருந்திடுவீர் !

------அடுத்துவரும்  தலைமுறையை அழிப்பதற்குத் துணியாதீர் !

                       -----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(21-05-2025)

-------------------------------------------------------------------------------------------