என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

முதல் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஜூலை, 2025

பாடல் (80) உலகில் முதல் மொழி தமிழ் மொழியே !

தமிழ்நாடு புலவர் பேரவை சார்பில் 05-07-2025 அன்று மாலை  7-00 முதல்  8-30 வரை நடைபெற்ற இணையவழிப் பாட்டரங்கில் முன்னிலை வகித்து 
"முதல் மொழி" என்னும் தலைப்பில் நான் வாசித்த  பாடல் ! 

---------------------------------------------------------------------------------------------------------------------------

  முதல் மொழி !

 

இன்றைய உலகில் வழங்கும் மொழிகள்

      ஏழா  யிரத்து இருநூ  றாம்  !

            இவற்றுள் முதல்மொழி என்னும் தகுதி

                  எந்தமிழ் மொழிக்கே உரித்தாகும்!

 

தொன்று தொட்டு உயிர்ப்புடன் வாழ்பவை 

      தமிழும் சீனமும் எனச் சொல்வர்

            துல்லியமாகச் சொல்வது அரிது !

                  தமிழின் அகவைபல் ஆயிரமாம்  !  

 

இலக்கணம் தன்னைத் தனக்கு வகுத்த

      முதல் மொழி எங்கள் தமிழ்மொழியே

            இலக்கிய வளத்தில் தொன்மை வாய்ந்தது !

                  எங்கள் தமிழ்மொழி ! முதல்மொழியே !

 

நிலமும் நீரும் தோன்றிய போதே

      முகிழ்த்தது எங்கள்  தமிழ் மொழியே !

            நிலவும் வானும் காற்றும் மீனும்

                  நித்தமும் ஆய்ந்தது  தமிழ்  மொழியே !

 

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் 

      என்றுரை மேன்மொழி  சொன்ன  மொழி !

            யாண்டும் இடும்பை இலவெனும் நிலையை

                  எய்திட நெறியுரை  தந்த  மொழி !  

 

ஓதும் நாளும் அறிவியல் ஆய்வில் 

      மூழ்கிய  முதல்மொழி  தமிழ் மொழியே !

            உரைத்தது அன்றே வலவன்  ஏவா

                  உயர் வான் ஊர்தியைச் சொன்ன மொழி !

 

அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்

      அவ்வையின்  கூற்று  நம்  மொழியே !

            அற்றம் காக்கும் கருவி அறிவென

                  அறைந்ததில் முதல் மொழி தமிழ்மொழியே !

 

அன்பிற் கில்லை அடைக்கும் தாழென

      ஆண்டீ ராயிரம் முன்சொன்  னார்  !

            அதுவே எம்மொழி முதல்மொழி தமிழ் மொழி

                  உலகில் தோன்றிய முதல் மொழியே !

 

விருந்து    புறத்தில்    இருந்திட  உண்ணா

      வியநெறி  சொன்ன  முதல் மொழியே  !

            வெற்றியின்  இலக்கை  எய்திட முயற்சி

                  வேண்டும் எனவழி சொன்னமொழி !

 

மருந்தென  வேண்டா  அருந்திய  உணவு 

      மறைந்தது  அறிந்து  உண்பீரேல்

            மருத்துவ அறிஞன் வள்ளுவன் வாய்மொழி

                  மாண்புடன் நிறுவிய  முதல்மொழியே !

 

அறவழி,   அறிவியல்  நெறிவழி,  உலகில்

      அறிவினை அடைவழி உரைத்தமொழி

            அன்னைத் தமிழ்மொழி  வேரிலை உணர்வீர்  

                    அதுவே முதல் மொழி பிறவில்லை !

 

திறமொழி  உலகில்  ஒருசில  உளவே !

      திருந்திய   தமிழே  முதல்  மொழியாம் !

            தென்னவர் செல்வ ! நற்றமிழ் மாந்த ! 

                  தெளிக ! முதல் மொழி தமிழ் மொழியே !

 =========================================================

ஆக்கம் + இடுகை, 

வை. வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர் ,

"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ,

{திருவள்ளுவாராண்டு 2056, ஆடவை (ஆனி) 22} 

{06-07-2025}

=========================================================