என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

பாடல் (81) தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

06-09-2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு புலவர் பேரவையின்  இணையவழிப் பாட்டரங்கில்  முன்னிலை வகித்து நான் படைத்த பாடல் ! 

------------------------------------------------------------------------------------------------


ஆட்சிமொழி    தமிழென்றார்     ஐம்பத்து     எட்டுமுதல் !

.....ஆயினும்  நடைமுறையில்  செயல்முறையில்   விரைவில்லை !

மாட்சிமிகு    அமைச்சர்கள்,   மாணவர்கள்,     அலுவலர்கள்

.....மனம்வைத்தால்  செயலாக்கம்  விரையாதோ ?  வளராதோ ?

 

ஊருக்கு      ஊர்கூட்டம்       கூடுகிறோம்    பேசுகிறோம் !

.....உருப்படியாய்     ஏதேனும்      சொல்லாக்கம்  நடந்ததுவா ?

பேருக்குச்      சிலபேர்கள்       கருத்தரங்கு   ஏறியதால்

.....பெற்றபயன்      யாதோகாண் !   பெரியீரே     சிந்திப்பீர் !

 

தமிழ்நாட்டில்   தமிழுணர்வு  நாள்தோறும்   குறைகிறது !

.....தமிழ்க்கல்வி   நிலையங்கள்   ஒவ்வொன்றாய்  மறைகிறது !

அமிழ்தான    மொழிவடிவம்    ஊடகத்தால்    சிதைகிறது !

.....அய்யகோ      இதைத்தடுக்க    அரசினர்க்கும் பொழுதில்லை !

 

பொங்குதமிழ்     அங்காடிப்     பலகைகளால்     வீழ்கிறது !

.....புற்றீசல்    போல்பதின்மப்    பள்ளியெங்கும்     சூழ்கிறது !

தங்குதடை     இன்றிதமிழ்ப்    பேசுதற்கு     ஆளில்லை !

.....தரமில்லா   தாளிகைகள்   மொழிக்கலப்பில் மூழ்குதையா !

 

ஆன்றோரே !    சான்றோரே !    அரங்கிலுள்ள  நாவலர்காள் !

.....அன்னைமொழி    நலிவடைதல்  அழகாமோ ? அறமாமோ ?

மன்பதையில்   நம்மொழியும்   மாண்புதனைப்   பெறவேண்டும் !

.....மனம்வைத்தால் அத்துணையும் வயமாகும் ! இஃதுண்மை !

 

கலைச்சொற்கள்   தமிழூற்றில்   ஊருணியாய்   வரவேண்டும் !

.....கற்றோர்தம்     கடனாற்றி    மொழிக்கேற்றம்  தரவேண்டும் !

அலையலையாய்  பிறசொற்கள்  மொழிமாற்றம்  பெறவேண்டும் !

…..அன்னைத் தமிழ்மொழி நம் உயிருக்கு நிகரன்றோ ?

 

அன்னைத் தமிழ்துறந்து ஆங்கிலத்தைக் கொண்டாடும்

…..அறிவிலிகாள் உமைத் தமிழர் எனவுரைத்தல் பேரிழிவு !

இன்னமுதத் தமிழ் நமது உயிருக்கு  நிகர் நேர் நேர் !

……ஏமாளித் தமிழர்களே இனியேனும் ! திருந்திடுவீர் !

 -------------------------------------------------------------------------------------

                                     ஆக்கம் + இடுகை:
               

                                   வை.வேதரெத்தினம்,

                            (vedarethinam70@gmail.com)

                                              ஆட்சியர்,
                   
                            "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

      [திருவள்ளுவராண்டு: 2056, மடங்கல் (ஆவணி) 22]

                                             {07-07-2025}

------------------------------------------------------------------------------------