என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பொழுதெழில் புலர்ந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொழுதெழில் புலர்ந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மே, 2022

பாடல் (30) (1970) பொழுதெழில் புலர்ந்துவரும் ! புள்ளினங்கள் ஆர்த்துஎழும் !

=================================================

புதுக்கோடையில் பூத்த பொங்கல் மலர் !

(ஆண்டு 1970)

பொங்கல் வாழ்த்து !

[ இது ஒரு ஊரகத்துக் காட்சி ]

=================================================

                     

பொழுதெழில்       புலர்ந்துவரும் !

…..புள்ளினங்கள்        ஆர்த்துஎழும் !

……….பொற்கதிர்கள்       மேலெழுந்துப்

……………பூவுலகை           ஊடுறுவும் !

 

தாழைமடல்        தூளிவிழும் !

…..தண்ணிலவும்       நாணியெழும்: !

……….தரணியெலாம்      வான்பனியைத்

……………தழுவியுடல்        மீமகிழும் !

 

கருங்குருவிக்       கூச்சலிடும் !

…..கட்டவிழும்         மொட்டிதழும் !

……….காரிகையர்         கற்பனையில்

……………கைவளரும்        கோலம்மிகும் !

 

வரப்புகளில்        பரங்கிமலர்

…..வான்பார்த்துப்       நகைமுகிழும் !

……….வண்டுகளின்        ஊங்காரம்

……………வாழ்த்தோதும் கதிரசையும் !

 

கன்றுகளை   நினைந்துருகும்,

…..கறவைகள்     பால்சொரியும் !

……….கட்டவிழ்த்து   விடப்பட்டக்

……………காளையெக்கர்  மீதுலவும் !!

 

சென்றுவருக   வருகவெனச்

…..செங்காந்தள்   கையசைப்பாள் !

……….சிரந்தாழ்த்தி   மார்கழியாள்

……………சென்றிடுவாள், தைவருவாள் !

 

ஏடணையாய்   நெல்சொரிந்து

…..இவ்வுலகைக்  காத்திடுவாள் !

……….ஏரோட்டும்     கைப்பிடித்துப்

……………பாராட்டிச்      சீர்தருவாள் !

 

நன்மைகளைத் தைதருவாள் !

…..நாமவளைப்   போற்றிடுவோம் !

……….நாவினிக்கப்    பொங்கலிட்டு

……………நன்றிசொலி;  வாழ்த்திடுவோம் !!

 

==================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedrethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு, 2053, விடை (வைகாசி) 11].

{25-05-2022}

==================================================