ஞாயிறு, 21 மே, 2023
பாடல் (70) தூய தமிழைப் போற்றுவோம் !
புதன், 17 மே, 2023
பாடல் (69) தூய தமிழைப் போற்றிடுவோம் (01) !
தமிழ் தமிழ் என்று தலைப்பாடாய்ப் பேசுகின்றோம் !
தமிழ் மொழியைக் காப்பதற்கு எவ்வழி நாம் முயல்கின்றோம் !
அமிழ்தமொழி தமிழென்று அரங்குகளில் பேசுகிறோம்!
ஆங்கிலம் கலவாமல் பேசுதற்கு அஞ்சுகிறோம் !
அய்யா என்று அழைக்கும் சொல் அடிக்கரும்பாய் இனிக்காதோ ?
ஆங்கிலத்தில் “சார்” என்று அழைப்பது தான் மாண்பாமோ ?
துய்யதமிழ் மொழி துறந்து “குட்மாணிங்” நமக்கெதற்கு ?
துடிக்கிறது நெஞ்சமெலாம் ”மம்மி” எனும் விளி கேட்டு !
அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்க வேண்டிய நாம்
ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புகிறோம் குழந்தைகளை !
என்னை ? இஃதென்ன இழிய நிலை ! தமிழர்களே !
இரந்து வாழ்வதினும் இறந்துவிடல் மேலன்றோ ?
வடமொழியை வருவித்துத் தமிழ்க் குடிலில் இடம்தந்தோம் !
வந்தமொழி நம்மொழியை வாட்டும்நிலை காணீரோ ?
அடடா ! ஓ ! தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு
அறியாமல் நாம் புழங்கும் சொற்களுக்கும் அளவேது ?
சோறு என்று சொல்லாமல் “சாதம்” என்போர் ஈங்குண்டு !
“சாதம்” தமிழல்ல என்பதை நாம் என்றுணர்வோம் ?
“ஆறு” என்று சொல்லாமல் “நதி” என்று அழைப்பவர்கள்,
அறிவாரா ”நதி” எனும்சொல் அழகுதமிழ் இலையென்று !
வடமொழியை விலக்காமல் வளம் குறையும் தமிழுக்கு
வலிமையா சேர்க்கிறது வக்கணையாய் ஆங்கிலம்தான் ?
அறியாமை விலக்கிடுவோம் ! அன்னைமொழி காத்திடுவோம் !
ஆங்கிலத்தில் பேசுவதை அறவே நாம் துறந்திடுவோம் !
தலைநிமிர்ந்து வாழ்வதற்கு “தமிழன்” என்னும் உணர்வு தேவை !
“தமிழ்”மொழி நம் விழியலவோ ? விழிப்படைக ! தமிழினமே !
உறங்கியது போதுமடா ! செந்தமிழா ! சீறியெழு !
உன்மொழிக்கு அணிசெய்ய உளம் துணிக ! அணிதிரள்க !
மறத்தமிழா ! உன்நாவில் மணித்தமிழே தவழட்டும் !
மாறின்றி ஆங்கிலத்தை மறந்துவிடு ! தமிழ் வாழ்க !
------------------------------------------------------------------
சொற்பொருள்:
தலைப்பாடு = பொறுப்பு
மாண்பாமோ = பெருமையோ ?
துய்ய தமிழ் = தூய தமிழ்
என்னை = என்ன ?
இரந்து = பிச்சை எடுத்து
ஈங்குண்டு = இங்கு உண்டு (இவ்வுலகில் உண்டு)
இலையென்று = இல்லை என்று
வக்கணையாய் = ஒழுங்காய், புத்திசாலித்தனமாய்.
மாறின்றி = மாற்றுக்கருத்தின்றி
-------------------------------------------------------------------------------------
------------------------------- -----------------------------------------------------
பாடல் (68) தமிழன் என்பது நம் முகவரி !
தமிழன் என்பது உரிமையின் முகவரி !
.........தமிழைத் துறந்தால் நமக்கிலை பிறவழி
!
அமுதத் தமிழ்மொழி அருகில் இருக்கையில்,
………ஆங்கில உவர்நீர் அருந்திட லாமா
?
உமியைத் தின்னும் விலங்குகள் போலே
……….உள்ளுறை அறிவை இழந்திடலாமா ?
தமியன் அலவே ? தமிழா ! தமிழா !
……….தமிழ்மீ துனக்குப் பற்றென்ப திலையா ?
வைகறைத் துயிலெழும் வேளையில் நாவில்
……….வரும்”குட் மாணிங்” வண்டமிழ் அலவே !
பைந்தொடி மனைவியைப் பார்த்துக் கூவும்
………..”பாவை !”. ”காப்பி !” இஃதென்ன தமிழா
?
கைகளில் ”பேஸ்டு”ம் ”பிரஷு”ம் ஏந்தி
…………கருக்கலில் குளியறை நுழையும் தமிழா !
மைந்துணர் வோடு பற்பசை தூரிகை
…………மணித்தமிழ் உரைத்திட மனமுனக் கிலையா ?
”பேண்டு”ம்
”ஷர்ட்”டும் ஆங்கிலம் அலவோ,
……….பீடுடை கலிங்கம் மேற்படம் என்பாய்
!
பூண்டிடும் அரணம் காலணி மறந்தாய் !
……….புகுத்தும் கால்களை ”ஷூ”வினில் ஈந்தாய்
?
மீண்டும் மீண்டும் ”டிபன்”என லாமோ ?
……….மின்மினி மனிதா சிற்றுணி இலையா ?
ஆண்டும் ஈண்டும் ஆங்கிலம் தானா ?
………அன்னைத் தமிழைக் கைவிடல் முறையா ?
காலையில் தொடங்கி இரவின் மடியில்
…………கண்துயில் வேளை ஈறாய்த் தமிழன்
!
சாலையில் ஆலையில் அலுவல் மனையில்
…………சந்தையில் மந்தையில் ஊருணிக் கரையில்
சோலையில் எங்கும் ஆங்கிலச் சொற்கள்
…………சுழலுது நாவில் ஈதென ஞாயம் ?
தோலில் சுரணையை இழந்துவிட் டனையோ ?
………..துப்புர வாய்த்தமிழ் துவளுது சோர்ந்து !
பெற்றவள் நிகராம் நந்தமிழ் நீக்கிப்
………….பிறனில் வாழும் ஆங்கில மொழியை
கொற்றவி யாகக் கொணர்ந்துன் வீட்டில்
……………குடிவைத் தனையே ஈதென நீதி?
நற்றவத் தமிழைப் போற்றிட மறந்தாய் !
…………..நன்றோ ஆங்கிலம்
கலந்துரை யாடல் ?
அற்றம் விளைக்கும் ஆங்கிலம் தழுவல்
………….அறமா ? தகுமா
? சொல்லுக தமிழா ?
தாய்வழி வந்தவுன் தமிழைப் போற்று !
…………தாழ்வடம் போன்றநின் தமிழைப் போற்று
!
காய்மதி ஒளிநின் கனித்தமிழ் போற்று !
………….கன்னற் கரும்பாம் தூய்தமிழ் போற்று !
நோய்மொழி ஆங்கிலம் நொதுநிலை அடைக !
………..நூர்த்திடு பிறமொழிச் சொல்லினி வேண்டாம் !
வாய்மொழி விரல்மொழி வண்டமிழ் வளர்க !
………….வாழ்வில் நாமினித்
தமிழினை மறவோம் !!
-------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
திங்கள், 15 மே, 2023
பாடல் (67) எழுகவே ! எழுகவே ! எழுகவே !
எழுகவே ! எழுகவே ! எழுகவே ! - வீறுகொண்டு
……….எழுகவே ! எழுகவே ! எழுகவே !
விழுவதற்கு
இடந்தராது எழுகவே ! – தமிழினமே
……….வெற்றிகொளப் புறப்படுநீ எழுகவே !
அழுவதற்கும் தொழுவதற்கும் நேரமில்லை எழுகவே !
……….அஞ்சியஞ்சி சோர்ந்திடாது எழுகவே !
பழுதுஇல்லை
நமதிலக்கில் எழுகவே ! – நமது
………படைமுரசு ஆர்ப்பரிக்க எழுகவே !
--------------------------------------------------------------------------------------------