என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 21 மே, 2023

பாடல் (70) தூய தமிழைப் போற்றுவோம் !

 

எழுகவே ! எழுகவே ! எழுகவே ! - தமிழினமே !

எழுகவே ! எழுகவே ! எழுகவே ! 



உறங்கியது  போதும் !  எந்தன் தமிழினமே ! நீ

உறங்குவதால் உந்தன்மொழி நலிகிறதே தமிழினமே !

உறங்கியது போதும் ! எந்தன் தமிழினமே !



பள்ளிகளில்  பயிற்றுமொழி ஆங்கிலமா ? - நம்

பணிக்களரி இருப்பதென்ன அயல்நிலமா ?

தாய்மொழியைப் புறக்கணித்து பிறமொழியா ? - இன்று 

தறிகெட்டு அலைவது ஏன் தமிழினமே ?



வளர்குழந்தைப் பெயரெல்லாம் வடமொழியில் ! - நமது 

வயிற்றுணவு பெயர்தாங்கல்  ஆங்கிலத்தில் ! - உடுக்கும் 

உடைக்குப் பெயர் வைப்பதெலாம் பிறமொழியில் ! - நாம்

உயிர்வாழும் நிலப்பெயர்தான் தமிழ்நாடா ?



ஆங்கிலத்தைக் கலந்து நாமும் பேசுவதேன் ?  - அன்னை

அரியணையில் பிறமொழிக்கு இடமெதற்கு ? - வணிக

நிறுவனங்கள் பெயர்களிலே தமிழில்லை ! - நாம்

நிமிர்ந்து நிற்கும் காலமினி வாராதா ?



சுரணையின்றி வாழ்வதுவும்  வாழ்விலையே ! - விழியைச் 

சூழ்ந்துநிற்கும் இருள்விலகும் நிலையிலையே ?

செந்தமிழில் குழந்தைகட்குப் பெயர்வைப்போம் ! - தமிழைச்

சிதைத்துவரும்  திரையுலகைப் புறக்கணிப்போம் !



பாரதியின் மொழிப்பற்றும் நமக்குஇலை - பாரதி

தாசனவர் பகன்றமொழியும்  நினைவு இலை ! - தமிழை

இழந்தபின்பு நமக்கிங்கே வாழ்க்கையிலை ! - சூடு

சுரணையுள்ள தமிழனாக வாழ்ந்திடுவோம் !


இனி வாழ்வோம்  வா!

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி 07)

(21-05-2023)
---------------------------------------------------------------------------------------



புதன், 17 மே, 2023

பாடல் (69) தூய தமிழைப் போற்றிடுவோம் (01) !


தமிழ் தமிழ் என்று தலைப்பாடாய்ப் பேசுகின்றோம் ! 

தமிழ் மொழியைக்  காப்பதற்கு எவ்வழி நாம் முயல்கின்றோம் !


அமிழ்தமொழி தமிழென்று அரங்குகளில் பேசுகிறோம்!

ஆங்கிலம் கலவாமல் பேசுதற்கு அஞ்சுகிறோம் !


அய்யா என்று அழைக்கும் சொல் அடிக்கரும்பாய் இனிக்காதோ ?

ஆங்கிலத்தில் “சார்” என்று அழைப்பது தான் மாண்பாமோ ? 


துய்யதமிழ் மொழி  துறந்து “குட்மாணிங்” நமக்கெதற்கு ?

துடிக்கிறது நெஞ்சமெலாம் ”மம்மி”  எனும்  விளி கேட்டு !


அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்க வேண்டிய நாம்  

ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புகிறோம் குழந்தைகளை !


என்னை ? இஃதென்ன இழிய நிலை ! தமிழர்களே !

இரந்து வாழ்வதினும் இறந்துவிடல் மேலன்றோ ?


வடமொழியை வருவித்துத் தமிழ்க் குடிலில் இடம்தந்தோம் !

வந்தமொழி நம்மொழியை வாட்டும்நிலை காணீரோ ?


அடடா ! ஓ ! தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு

அறியாமல் நாம் புழங்கும் சொற்களுக்கும் அளவேது ?


சோறு என்று சொல்லாமல் “சாதம்” என்போர் ஈங்குண்டு !

“சாதம்” தமிழல்ல என்பதை நாம் என்றுணர்வோம் ?


“ஆறு” என்று சொல்லாமல் “நதி” என்று அழைப்பவர்கள்,

அறிவாரா ”நதி” எனும்சொல் அழகுதமிழ் இலையென்று !


வடமொழியை விலக்காமல் வளம் குறையும் தமிழுக்கு 

வலிமையா சேர்க்கிறது வக்கணையாய் ஆங்கிலம்தான் ?


அறியாமை விலக்கிடுவோம் ! அன்னைமொழி காத்திடுவோம் !

ஆங்கிலத்தில் பேசுவதை அறவே நாம் துறந்திடுவோம் !


தலைநிமிர்ந்து  வாழ்வதற்கு “தமிழன்” என்னும் உணர்வு தேவை !

“தமிழ்”மொழி நம் விழியலவோ ? விழிப்படைக ! தமிழினமே !


உறங்கியது போதுமடா ! செந்தமிழா ! சீறியெழு !

உன்மொழிக்கு அணிசெய்ய  உளம் துணிக ! அணிதிரள்க !


மறத்தமிழா ! உன்நாவில் மணித்தமிழே தவழட்டும் !

மாறின்றி ஆங்கிலத்தை மறந்துவிடு ! தமிழ் வாழ்க !


------------------------------------------------------------------

சொற்பொருள்:

தலைப்பாடு = பொறுப்பு

மாண்பாமோ = பெருமையோ ?

துய்ய தமிழ் = தூய தமிழ்

என்னை = என்ன ?

இரந்து = பிச்சை எடுத்து

ஈங்குண்டு = இங்கு உண்டு (இவ்வுலகில் உண்டு)

இலையென்று = இல்லை என்று

வக்கணையாய் = ஒழுங்காய், புத்திசாலித்தனமாய்.

மாறின்றி = மாற்றுக்கருத்தின்றி

-------------------------------------------------------------------------------------

                                     ஆக்கம் + இடுகை:
               
                         

                                   வை.வேதரெத்தினம்,

                                (vedarethinam70@gmail.com)

                                              ஆட்சியர்,
                   
                            "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

          [திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]

                                               {27-07-2022}

-------------------------------    -----------------------------------------------------  

பாடல் (68) தமிழன் என்பது நம் முகவரி !

 

 

தமிழன்     என்பது     உரிமையின்   முகவரி !

.........தமிழைத்     துறந்தால்    நமக்கிலை    பிறவழி !

அமுதத்    தமிழ்மொழி   அருகில்   இருக்கையில்,

………ஆங்கில      உவர்நீர்   அருந்திட   லாமா ?

உமியைத்    தின்னும்    விலங்குகள் போலே

……….உள்ளுறை     அறிவை    இழந்திடலாமா ?

தமியன்     அலவே ?    தமிழா !    தமிழா !

……….தமிழ்மீ     துனக்குப்      பற்றென்ப     திலையா ?

 

வைகறைத்    துயிலெழும்     வேளையில்      நாவில்

……….வரும்குட்     மாணிங்       வண்டமிழ்     அலவே !   

பைந்தொடி    மனைவியைப்    பார்த்துக்        கூவும் 

………..”பாவை !”.      காப்பி !”      இஃதென்ன     தமிழா ? 

கைகளில்     பேஸ்டும்       பிரஷும்       ஏந்தி      

…………கருக்கலில்    குளியறை      நுழையும்      தமிழா !    

மைந்துணர்    வோடு     பற்பசை        தூரிகை

…………மணித்தமிழ்      உரைத்திட    மனமுனக்   கிலையா ?

 

பேண்டும்    ஷர்ட்டும்     ஆங்கிலம்     அலவோ,

……….பீடுடை         கலிங்கம்      மேற்படம்    என்பாய் !

பூண்டிடும்    அரணம்      காலணி    மறந்தாய் !

……….புகுத்தும்    கால்களை    ஷூவினில்  ஈந்தாய் ?

மீண்டும்    மீண்டும்    டிபன்என      லாமோ ?

……….மின்மினி    மனிதா     சிற்றுணி       இலையா ?

ஆண்டும்    ஈண்டும்     ஆங்கிலம்      தானா ?

………அன்னைத்    தமிழைக்    கைவிடல்    முறையா ?


காலையில்     தொடங்கி     இரவின்   மடியில்

…………கண்துயில்     வேளை       ஈறாய்த்     தமிழன் !

சாலையில்     ஆலையில்    அலுவல்    மனையில்

…………சந்தையில்     மந்தையில்    ஊருணிக்   கரையில்

சோலையில்    எங்கும்       ஆங்கிலச்     சொற்கள்

…………சுழலுது        நாவில்      ஈதென        ஞாயம் ?

தோலில்     சுரணையை      இழந்துவிட்    டனையோ ?

………..துப்புர       வாய்த்தமிழ்     துவளுது      சோர்ந்து !

 

பெற்றவள்      நிகராம்       நந்தமிழ்     நீக்கிப்

………….பிறனில்       வாழும்     ஆங்கில      மொழியை

கொற்றவி    யாகக்    கொணர்ந்துன்      வீட்டில்   

……………குடிவைத்      தனையே     ஈதென        நீதி?

நற்றவத்        தமிழைப்     போற்றிட     மறந்தாய் !

…………..நன்றோ       ஆங்கிலம்     கலந்துரை     யாடல் ?

அற்றம்         விளைக்கும்      ஆங்கிலம்     தழுவல்

………….அறமா ?     தகுமா ?      சொல்லுக       தமிழா ?

    

தாய்வழி      வந்தவுன்      தமிழைப்      போற்று !

…………தாழ்வடம்      போன்றநின்    தமிழைப்   போற்று !

காய்மதி      ஒளிநின்        கனித்தமிழ்    போற்று !

………….கன்னற்       கரும்பாம்    தூய்தமிழ்       போற்று !

நோய்மொழி   ஆங்கிலம்      நொதுநிலை     அடைக !

………..நூர்த்திடு      பிறமொழிச்   சொல்லினி    வேண்டாம் !

வாய்மொழி     விரல்மொழி    வண்டமிழ்      வளர்க  !

………….வாழ்வில்    நாமினித்       தமிழினை   மறவோம் !!


-------------------------------------------------------------------------------------

                                     ஆக்கம் + இடுகை:
               

                                   வை.வேதரெத்தினம்,

                            (vedarethinam70@gmail.com)

                                              ஆட்சியர்,
                   
                            "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

      [திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]

                                             {27-07-2022}

------------------------------------------------------------------------------------  


திங்கள், 15 மே, 2023

பாடல் (67) எழுகவே ! எழுகவே ! எழுகவே !

 

எழுகவே ! எழுகவே ! எழுகவே ! - வீறுகொண்டு

……….எழுகவே ! எழுகவே ! எழுகவே !

விழுவதற்கு  இடந்தராது  எழுகவே ! – தமிழினமே

……….வெற்றிகொளப்  புறப்படுநீ  எழுகவே !

அழுவதற்கும் தொழுவதற்கும் நேரமில்லை எழுகவே !

……….அஞ்சியஞ்சி  சோர்ந்திடாது   எழுகவே !

பழுதுஇல்லை  நமதிலக்கில்  எழுகவே ! – நமது

………படைமுரசு  ஆர்ப்பரிக்க எழுகவே !

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ச் சிப்பி” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2054, விடை (வைகாசி)01]

{15-05-2023}

---------------------------------------------------------------------------------------------