என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 17 மே, 2023

பாடல் (69) தூய தமிழைப் போற்றிடுவோம் (01) !


தமிழ் தமிழ் என்று தலைப்பாடாய்ப் பேசுகின்றோம் ! 

தமிழ் மொழியைக்  காப்பதற்கு எவ்வழி நாம் முயல்கின்றோம் !


அமிழ்தமொழி தமிழென்று அரங்குகளில் பேசுகிறோம்!

ஆங்கிலம் கலவாமல் பேசுதற்கு அஞ்சுகிறோம் !


அய்யா என்று அழைக்கும் சொல் அடிக்கரும்பாய் இனிக்காதோ ?

ஆங்கிலத்தில் “சார்” என்று அழைப்பது தான் மாண்பாமோ ? 


துய்யதமிழ் மொழி  துறந்து “குட்மாணிங்” நமக்கெதற்கு ?

துடிக்கிறது நெஞ்சமெலாம் ”மம்மி”  எனும்  விளி கேட்டு !


அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்க வேண்டிய நாம்  

ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புகிறோம் குழந்தைகளை !


என்னை ? இஃதென்ன இழிய நிலை ! தமிழர்களே !

இரந்து வாழ்வதினும் இறந்துவிடல் மேலன்றோ ?


வடமொழியை வருவித்துத் தமிழ்க் குடிலில் இடம்தந்தோம் !

வந்தமொழி நம்மொழியை வாட்டும்நிலை காணீரோ ?


அடடா ! ஓ ! தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு

அறியாமல் நாம் புழங்கும் சொற்களுக்கும் அளவேது ?


சோறு என்று சொல்லாமல் “சாதம்” என்போர் ஈங்குண்டு !

“சாதம்” தமிழல்ல என்பதை நாம் என்றுணர்வோம் ?


“ஆறு” என்று சொல்லாமல் “நதி” என்று அழைப்பவர்கள்,

அறிவாரா ”நதி” எனும்சொல் அழகுதமிழ் இலையென்று !


வடமொழியை விலக்காமல் வளம் குறையும் தமிழுக்கு 

வலிமையா சேர்க்கிறது வக்கணையாய் ஆங்கிலம்தான் ?


அறியாமை விலக்கிடுவோம் ! அன்னைமொழி காத்திடுவோம் !

ஆங்கிலத்தில் பேசுவதை அறவே நாம் துறந்திடுவோம் !


தலைநிமிர்ந்து  வாழ்வதற்கு “தமிழன்” என்னும் உணர்வு தேவை !

“தமிழ்”மொழி நம் விழியலவோ ? விழிப்படைக ! தமிழினமே !


உறங்கியது போதுமடா ! செந்தமிழா ! சீறியெழு !

உன்மொழிக்கு அணிசெய்ய  உளம் துணிக ! அணிதிரள்க !


மறத்தமிழா ! உன்நாவில் மணித்தமிழே தவழட்டும் !

மாறின்றி ஆங்கிலத்தை மறந்துவிடு ! தமிழ் வாழ்க !


------------------------------------------------------------------

சொற்பொருள்:

தலைப்பாடு = பொறுப்பு

மாண்பாமோ = பெருமையோ ?

துய்ய தமிழ் = தூய தமிழ்

என்னை = என்ன ?

இரந்து = பிச்சை எடுத்து

ஈங்குண்டு = இங்கு உண்டு (இவ்வுலகில் உண்டு)

இலையென்று = இல்லை என்று

வக்கணையாய் = ஒழுங்காய், புத்திசாலித்தனமாய்.

மாறின்றி = மாற்றுக்கருத்தின்றி

-------------------------------------------------------------------------------------

                                     ஆக்கம் + இடுகை:
               
                         

                                   வை.வேதரெத்தினம்,

                                (vedarethinam70@gmail.com)

                                              ஆட்சியர்,
                   
                            "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

          [திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]

                                               {27-07-2022}

-------------------------------    -----------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக