என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 21 மே, 2023

பாடல் (70) தூய தமிழைப் போற்றுவோம் !

 

எழுகவே ! எழுகவே ! எழுகவே ! - தமிழினமே !

எழுகவே ! எழுகவே ! எழுகவே ! 



உறங்கியது  போதும் !  எந்தன் தமிழினமே ! நீ

உறங்குவதால் உந்தன்மொழி நலிகிறதே தமிழினமே !

உறங்கியது போதும் ! எந்தன் தமிழினமே !



பள்ளிகளில்  பயிற்றுமொழி ஆங்கிலமா ? - நம்

பணிக்களரி இருப்பதென்ன அயல்நிலமா ?

தாய்மொழியைப் புறக்கணித்து பிறமொழியா ? - இன்று 

தறிகெட்டு அலைவது ஏன் தமிழினமே ?



வளர்குழந்தைப் பெயரெல்லாம் வடமொழியில் ! - நமது 

வயிற்றுணவு பெயர்தாங்கல்  ஆங்கிலத்தில் ! - உடுக்கும் 

உடைக்குப் பெயர் வைப்பதெலாம் பிறமொழியில் ! - நாம்

உயிர்வாழும் நிலப்பெயர்தான் தமிழ்நாடா ?



ஆங்கிலத்தைக் கலந்து நாமும் பேசுவதேன் ?  - அன்னை

அரியணையில் பிறமொழிக்கு இடமெதற்கு ? - வணிக

நிறுவனங்கள் பெயர்களிலே தமிழில்லை ! - நாம்

நிமிர்ந்து நிற்கும் காலமினி வாராதா ?



சுரணையின்றி வாழ்வதுவும்  வாழ்விலையே ! - விழியைச் 

சூழ்ந்துநிற்கும் இருள்விலகும் நிலையிலையே ?

செந்தமிழில் குழந்தைகட்குப் பெயர்வைப்போம் ! - தமிழைச்

சிதைத்துவரும்  திரையுலகைப் புறக்கணிப்போம் !



பாரதியின் மொழிப்பற்றும் நமக்குஇலை - பாரதி

தாசனவர் பகன்றமொழியும்  நினைவு இலை ! - தமிழை

இழந்தபின்பு நமக்கிங்கே வாழ்க்கையிலை ! - சூடு

சுரணையுள்ள தமிழனாக வாழ்ந்திடுவோம் !


இனி வாழ்வோம்  வா!

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி 07)

(21-05-2023)
---------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக