என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 30 மார்ச், 2022

பாடல் (04) (1963) புரட்சிக் கவியே பொன்மணியே !

=================================================

கவியரங்கத்தில் பங்கேற்கத் தயங்கிய தஞ்சை

மன்னர் சரபோசிக் கல்லூரி நண்பர்

இரா.தமிழரசனுக்கு விடுத்த கவிதைக் கடிதம்

( 1963 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

=================================================

 

புரட்சிக்           கவியே !          பொன்மணியே !

                 பொலிவுறு          விளக்கே !        தமிழரசே !

திரட்சிக்          கனியே !          தமிழ்த்தேனே !

                 தென்னவர்          கோவே !         தேன்மதியே !

மருட்சி           கொளாதே !      மயங்காதே !

                 மகிழ்ச்சி            யுடன்நீ           கவிபாடு !

தருணம்          காலம்            பாராதே !

                 தமிழ்த்              தூதாற்று !        தாய்போற்று !

 

==================================================

 

--------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 16]

 {30-03-2022}

 

-------------------------------------------------------------------------------------

திங்கள், 28 மார்ச், 2022

பாடல் (03) (1963) காவிய மலருட் புகுந்தினிமை !

=================================================

அரியலூர்  மாவட்டம் புங்கங்குழி  ஒட்டக்கோயிலைச் 

சேர்ந்த

கல்லூரி நண்பர் தியாகராஜனின் நெட்டெழுத்து ஏட்டில் 

(AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த 

ஒரு கவிதை

(1963 – ஆம் ஆண்டு எழுதிய கவிதை))

==================================================

                     

காவிய      மலருட்      புகுந்தினிமைக்

…….கருத்துக்        குவியல்      தேனெடுத்து,

மேவிய     நும்முளத்    தேனீக்கள்

…….மெழுகுக்        குடிலாம்      நுமதுடலில் ,

கோவிய    லன்னக்      காத்துவரின்

…….குழுமிய         பயன்தான்    என்னென்கொல் !

ஓவிய       உருவோய் !  என்னண்ப !

…….உதவுக          தேனை        உலகிற்கே !

 

=================================================

 -----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

 {28-03-2022}

------------------------------------------------------------------------------------

 

பாடல் (02) (1962) சேர்ந்திடுவீர் நம்நாட்டின் பிற்கால மன்னர்காள் !

-----------------------------------------------------------------------------------

இளமைப் பருவத்துச் சிந்தனை !

(1962 – ஆம் ஆண்டு எழுதிய வெண்பா !)

------------------------------------------------------------------------------------

 

சேர்ந்திடுவீர்      நம்நாட்டின்    பிற்கால   மன்னர்காள் !

சோர்ந்திருக்கும்  நெஞ்சமும்     சுகமடைய,  -  தார்மாலை

வெற்றிகாண்     திண்டோள்     பெருவீரர்    சம்பத்தும்

தோற்றியதோர்   நற்கட்          சியில் !

 

----------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

 ---------------------------------------------------------------------------------

 

பாடல் (01) (1962) தித்திக்கும் தெள்ளமுதே ! தேனிலவே !

==================================================

ஆம்பலாப்பட்டு ஊரினரும் காற்பந்து விளையாட்டு வீரரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கல்லூரி நண்பர் வைரக்கண்ணுவின் நெட்டெழுத்து ஏட்டில் (AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த ஒரு கவிதை

(1962 - ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

==================================================

 

தித்திக்கும்     தெள்ளமுதே !    தேனிலவே !   பூஞ்சுனையே !

 

முத்தொக்கும்  கண்ணே !        வைரமே !     மும்மணியே !

 

எத்திக்கும்      புகழ்மணக்கக்     காற்பந்து      ஆடுவையே !

 

வித்தொக்கும்   நும்திறனைத்      தமிழுக்கே     ஈகுவையே !

 

=================================================

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[தி.ஆ: 2053,மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

==================================================

பாடல் (63) (2020) அன்றைய நாளில் கால்நடையாக அயலூர் !

  

----------------------------------------------------------------------------------

அன்றும் ! இன்றும் ! - ஓர் ஒப்பீடு !

 [2020 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை]

-----------------------------------------------------------------------------------

 

      அன்றைய நாளில் கால்நடையாக

                .....அயலூர் சென்றோம் நோயில்லை !

                ..........ஆதவன் எழுமுன் துயிலெழச் செய்தோம்

                ...............அழகிய உடலில் நோயில்லை !

 

      நன்றென எண்ணிக் காய்கறி உண்டோம்

                .....நலிவும் மெலிவும் வரவில்லை !

                ............நாள்தொறும் ஆற்றில் குளத்தில் குளித்து

                ..................நீச்சலடித்தோம் அயர்வில்லை !

 

      இன்றைய நாளில் ஊர்தியில் அன்றி

                .....எங்கும் எதற்கும் செலல் இல்லை !

                ............இரவில் விழித்துப் பகலில் உறங்கும்

.                .................இழிகுணம் இன்னும் விடவில்லை !

 

      கண்டதை உண்டு வயிறும் வாழ்வும்

                .....கனலாய் எரிவது நினைவில்லை !

                ..........கால்கள் அளைந்திட அறையில் குளியல்,

                ................நீச்சல் கற்கவும் வழியில்லை !

 

      அன்றைய மாந்தன் நீராகாரம்

                .....அருந்தி நலமுடன் வாழ்ந்திட்டான் !

                ............அமுதாய்ப் பழைய சோறும் தயிரும்

.                ..................அளவாய் உண்டு மகிழ்ந்திட்டான் !

 

      இன்னலம் நல்கும்  எருவை இட்டான்;

                .....எள்ளும் கொள்ளும் விளைத்திட்டான் !

                ............எங்கணும் கரும்பும் நெல்லும் விளைந்தது

                ..................இனிதாய் வாழ்வைக் கழித்திட்டான் !

 

      இன்றைய மாந்தன் எழுந்ததும் குளம்பியை

                ......இரைப்பைக் குள்ளே ஊற்றுகிறான் !

                ............இட்டளி சத்துணி இரண்டையும் மாந்தி

                ...................இருக்கும் வலுவையும் இழக்கின்றான் !

 

      நன்மைகள் தாரா உரத்தை, மருந்தை

                ......நயந்தே  வயலில் தெளிக்கின்றான் !

.                ..........நலிவை ஊட்டும் வேதிப் பொருள்களை

                .................நாளும் உண்டு இளைக்கின்றான் !

 

      அன்றைய மாந்தன் உண்மையைப் பேசி

                .....நன்மையைச் செய்து வாழ்ந்திட்டான் !

                ..........இன்றைய மாந்தன் பொய்களை விற்றுப்

                ..............பைகளைப் வாங்கித் தாழ்ந்திட்டான் !

 

      அன்றைய மாந்தன் நேரிய வழியில்

                ......ஈட்டிய பணத்தை  ஈந்திட்டான் !

                ............இன்றைய மாந்தன் கொள்ளை அடித்துக்

                .................குவிப்பதில் மிகவும் தேர்ந்திட்டான் !

 

      அன்றைய மாந்தன் ஏய்த்துப் பிழைத்தல்

                ......ஈனத் தொழில் என வாழ்ந்திட்டான் !

                ............இன்றைய மாந்தன் எதையும் செய்யும்

                ..................இழிகுணம் தன்னில்  வீழ்ந்திட்டான் !

 

      அன்றைய உலகம் அமைதியும் வளமும்

                ......அரும்பிடச் செழித்து இலங்கியது !

                ...........இன்றைய உலகம் பித்தம் பிடித்தவர்

                ...............ஆள்கையில் நித்தமும் அழிகிறது !

 

      கண்கள் இருந்தும் குருடாய் வாழும்

                ......மாந்தரை நினைத்தால் துயிலில்லை !

                ...........கவலை மனதில் சடுகுடு ஆடும்

                .................காட்சியை நினைத்தால் துயிலில்லை !

 

      பெண்கள் இங்கே பாலியல் துன்பம்

                .....அடைதல் கண்டால் துயிலில்லை !

                ............பேய்கள் போல ஊர்தியில் பறக்கும்

                ...................பேதையை நினைத்தால் துயிலில்லை !

 

      மன்பதை தன்னில் நீதியும் நேர்மையும்

                ......மடிவதைக் கண்டால் துயிலில்லை !

                ............மானம் பெரிதென வாழ்ந்த தமிழினம்

                ....................மயங்குது மதுவில்  துயிலில்லை !

 

      அன்பும் அருளும் நலியுது நாட்டில்

                ......அந்தோ தமிழா ! உணர்வாயா ?

                ............அன்னைத் தமிழைக் கண்போல் காக்கும்

                ....................அறிவை நீயும் பெறுவாயா ?

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

 {28-03-2022}

------------------------------------------------------------------------------------


பாடல் (64) (2020) உண்மை வாய்மை மெய்ம்மை மூன்றும் !

-------------------------------------------------------------------------------------

2020 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை !

கண்ணில் தெரியும் கதிரவன் உண்மைகண்டது 

உரைத்தல் “வாய்மையம்மா !

-------------------------------------------------------------------------------------

                   

     உண்மை வாய்மை மெய்ம்மை மூன்றும்

      ....ஒன்றென எண்ணல் சரியாகா !

                   

     கண்ணில் தெரியும்  கதிரவன் உண்மை”,

      .....கண்டது உரைத்தல் வாய்மையமா !

                  

      மண்ணுயிர் வாழ்க்கை  கதிரவன் அருளால்,

      .....மறந்திடத் தகுமோ இதுமெய்ம்மை” !

                   

     திண்ணிய வாய்மைத் திறமிகு வழியில்,

      .....திருக்குறள் போற்றி ஒழுகிடுவோம் !

 

                   

     வள்ளுவ முனிவர் வாய்மையைச் சொல்லி,

     .....வடித்தார் பத்துத் திருக்குறளை !

                   

     தெள்ளிய நல்லுரை அவரது சொல்லுரை,

     .....தெவிட்டாத் தேனது பருகிடுவோம் !

                   

     ஒள்ளிய வாய்மை யாதெனில் தீமை

     .....ஒன்றும் பயவா உரையாமே !

                   

     புள்ளியர் சொல்லும் பொய்மையும் வாய்மை

     .....புரைதீர் நன்மை பயக்குமெனின் !

 


     உடலைக் கழுவிடத் தண்ணீர் வேண்டும் !

     .....உளத்தைக் கழுவிட வாய்மை வேண்டும் !

                   

     அடல்மிகு வாய்மை அளித்திடும்  நன்மை,

     .....அமைதியை அழித்துத் தீய்த்திடும் பொய்ம்மை !

                   

     மடல்விரி தாமரை மணமாய் வள்ளுவம்

     .....மயக்குது மனதைப் பருகுவம் வாரீர் !!

                   

     வடலியென் பாடலில் வளங்குறை வென்றால்,

     .....வயமா நீவிர் பொறுத்தருள் வீரே !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

 {28-03-2022}

--------------------------------------------------------------------------------------