என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

நெடிதே உறங்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெடிதே உறங்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மே, 2025

பாடல் (77) நெடிதே உறங்கும் தமிழினமே உன் நித்திரை கலைவது எப்போது ?

 

நெடிதே  உறங்கும் தமிழினமே  - உன்

----------நித்திரை கலைவது எப்போது ?

கடிதே  உறங்கும் தமிழனமே ! – உன்

----------கண் மலர் திறப்பது எப்போது ?

மடிதே  உறங்கும் தமிழினமே – உன்

----------மடிமை கலைவது எப்போது ?

விடியல்  உனக்குத் தெரியலையா ? – உன்

----------விழிகளைத் திறந்து உலகைப் பார் !

 

உலகில் மூத்தது தமிழலவோ ? – உன்

----------மூச்சினில்  மலர்ந்த மொழியலவோ ?

அலகை மாந்தர் கவடுவழி  - நம்

-----------அன்னைத் தமிழை அழிப்பதுவோ ?

சிலையாய்த் தமிழன் சமைந்தது ஏன் ? - உன்

-----------சிந்தையில் உறக்கம் கலையவிலை  !!

மலையில் விளைந்த நறுஞ்சாந்தம் – இன்று

----------மண்ணில் புதைந்து மடிகிறதே !

 

எங்கும்  எதையும் கலப்பதுவோ ? – நம்

----------இனமொழி தமிழைச் சிதைப்பதுவோ ?

ஆங்கிலம் ஒருபுறம் சிதைக்கிறது ! – தீய

----------வடமொழி மறுபுறம் அழிக்கிறது !

தங்கத் தமிழா உறங்குவதேன் ? – உன்

----------தலைமைப் பண்பும் வீழ்ந்தது ஏன் ?

பொங்கு மாங்கடல் எழுவதைப் போல் – நீ

----------புலிபோல்  எழுவதும்  எந்நாளோ ? 

 

தமிழில்  ஆங்கிலம் கலப்பதுவோ  ! – உன்

----------தனித்துவம் மறைந்திட உறங்குவதோ ?

அமிலச்  சொற்கள்  நற்றமிழை – இன்று

----------அழித்திட நாமே இடம்தந்தோம் !

உமியைக் கலந்து அரிசியுடன் – நீ

----------உலையில் இடுவதை  என்னென்பேன் ?

தமிழா ! தமிழா ! விழித்திடுவாய் ! – நீ

----------தயக்கம்  கலைத்து உயிர்த்தெழுவாய் !!

 

இரயிலும் பஸ்ஸும் நம் வாயில் – நித்தம்

----------இடம்பெறத்  தமிழினம் இசைகுவதோ?

உரமில்  டீயும்  பிஸ்கட்டும் – உன்

----------உரிமையைப் பறிப்பது தெரிகிலையோ ?

வரமோ ? அறமோ ? ஈங்கில்லை ! – நீ

----------வாழ்வது தமிழால் மறவாதே !

கரத்தில் தவழும் வாச்சினிலே ! – உன்

----------கனித்தமிழ் சிதைவது தெரிகிலையோ ?

 

வைகறைத் துயிலெழு வேளைமுதல் – உன்

----------வாள்விழி  மூடித்  துயிலும் வரை !

ஐயகோ  ஆங்கிலம் உன்நாவில் – நிதம் 

----------அலறுது ! அலறுது ! அறமிதுவோ ?

மைவிழி மம்மி டாடியெலாம் – தமிழ்

----------மரபினில் விளைந்த  சொல்லிலையே !

பைந்தமிழ் மறந்த தமிழினமே ! – நெஞ்சம்

----------பதறுது ! பதறுது ! புரியலையா ?

 

தமிங்கிலம் நமக்கினி வேண்டாவே ! – நம்

----------தடுமாற்ற மேநமை  வீழத்திவிடும் !

அமிழ்தினும் இனிய தமிழ்மொழியை – நாம்

----------அருமருந் தாகப் புரந்திடுவோம் !

துமித்  துமியாகக் கலப்புமொழி – நமைத் 

----------துப்புர  வாகவே  அழித்துவிடும் !

திமிறும் கலப்பை  ஒழித்திடுவோம் ! – இனித்

----------தீந்தமிழ் காத்து வாழ்ந்திடுவோம் !

 

வேண்டா ! வேண்டா ! தமிங்கிலமே ! – நம்

----------நம் விழிகளைக் குதறிக் கிழித்திடுமே !

தூண்டா விளக்கு அணைவதுபோல் – தமிழ்

----------துஞ்சிடும் ஒருநாள் சிந்திப்பாய் !

ஏண்டா தமிழா ! மொழியுணர்வு, - உன்

----------இதயம்   விட்டே மறைந்ததுவோ ?

ஆண்டநம் தலைமுறை தமிழ் மண்ணில் – இனி

----------ஆளுவ தெந்நாள் ? எந்நாளோ ?

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(21-05-2025)

-------------------------------------------------------------------------------------------