நெடிதே
உறங்கும் தமிழினமே - உன்
----------நித்திரை கலைவது எப்போது ?
கடிதே
உறங்கும் தமிழனமே ! – உன்
----------கண் மலர் திறப்பது எப்போது ?
மடிதே
உறங்கும் தமிழினமே – உன்
----------மடிமை கலைவது எப்போது ?
விடியல் உனக்குத் தெரியலையா ? – உன்
----------விழிகளைத்
திறந்து உலகைப் பார் !
உலகில் மூத்தது தமிழலவோ ? –
உன்
----------மூச்சினில் மலர்ந்த மொழியலவோ ?
அலகை மாந்தர் கவடுவழி - நம்
-----------அன்னைத் தமிழை
அழிப்பதுவோ ?
சிலையாய்த் தமிழன் சமைந்தது
ஏன் ? - உன்
-----------சிந்தையில்
உறக்கம் கலையவிலை !!
மலையில் விளைந்த
நறுஞ்சாந்தம் – இன்று
----------மண்ணில் புதைந்து
மடிகிறதே !
எங்கும் எதையும் கலப்பதுவோ
? – நம்
----------இனமொழி தமிழைச்
சிதைப்பதுவோ ?
ஆங்கிலம் ஒருபுறம்
சிதைக்கிறது ! – தீய
----------வடமொழி மறுபுறம்
அழிக்கிறது !
தங்கத் தமிழா உறங்குவதேன் ?
– உன்
----------தலைமைப் பண்பும்
வீழ்ந்தது ஏன் ?
பொங்கு மாங்கடல் எழுவதைப்
போல் – நீ
----------புலிபோல் எழுவதும் எந்நாளோ ?
தமிழில் ஆங்கிலம் கலப்பதுவோ ! – உன்
----------தனித்துவம்
மறைந்திட உறங்குவதோ ?
அமிலச் சொற்கள்
நற்றமிழை – இன்று
----------அழித்திட நாமே
இடம்தந்தோம் !
உமியைக் கலந்து அரிசியுடன் –
நீ
----------உலையில்
இடுவதை என்னென்பேன் ?
தமிழா ! தமிழா !
விழித்திடுவாய் ! – நீ
----------தயக்கம் கலைத்து உயிர்த்தெழுவாய் !!
இரயிலும் பஸ்ஸும் நம்
வாயில் – நித்தம்
----------இடம்பெறத் தமிழினம் இசைகுவதோ?
உரமில் டீயும்
பிஸ்கட்டும் – உன்
----------உரிமையைப்
பறிப்பது தெரிகிலையோ ?
வரமோ ? அறமோ ? ஈங்கில்லை ! –
நீ
----------வாழ்வது தமிழால்
மறவாதே !
கரத்தில் தவழும் வாச்சினிலே
! – உன்
----------கனித்தமிழ்
சிதைவது தெரிகிலையோ ?
வைகறைத் துயிலெழு வேளைமுதல்
– உன்
----------வாள்விழி மூடித் துயிலும் வரை !
ஐயகோ ஆங்கிலம் உன்நாவில் – நிதம்
----------அலறுது ! அலறுது
! அறமிதுவோ ?
மைவிழி மம்மி டாடியெலாம் –
தமிழ்
----------மரபினில்
விளைந்த சொல்லிலையே !
பைந்தமிழ் மறந்த தமிழினமே !
– நெஞ்சம்
----------பதறுது ! பதறுது
! புரியலையா ?
தமிங்கிலம் நமக்கினி
வேண்டாவே ! – நம்
----------தடுமாற்ற மேநமை வீழத்திவிடும் !
அமிழ்தினும் இனிய
தமிழ்மொழியை – நாம்
----------அருமருந் தாகப்
புரந்திடுவோம் !
துமித் துமியாகக் கலப்புமொழி – நமைத்
----------துப்புர வாகவே
அழித்துவிடும் !
திமிறும் கலப்பை ஒழித்திடுவோம் ! – இனித்
----------தீந்தமிழ் காத்து
வாழ்ந்திடுவோம் !
வேண்டா ! வேண்டா !
தமிங்கிலமே ! – நம்
----------நம் விழிகளைக்
குதறிக் கிழித்திடுமே !
தூண்டா விளக்கு அணைவதுபோல் –
தமிழ்
----------துஞ்சிடும்
ஒருநாள் சிந்திப்பாய் !
ஏண்டா தமிழா ! மொழியுணர்வு,
- உன்
----------இதயம் விட்டே மறைந்ததுவோ ?
ஆண்டநம் தலைமுறை தமிழ்
மண்ணில் – இனி
----------ஆளுவ தெந்நாள் ? எந்நாளோ ?
வை . வேதரெத்தினம்
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ
(21-05-2025)
-------------------------------------------------------------------------------------------