தமிழ்நாடு புலவர் பேரவையின் இணைய வழிப் பாட்டரங்கில் 01-02-2025 அன்று முன்னிலை வகித்து நான் அரங்கேற்றிய பாடல் !
-------------------------------------------------------------------------------
தமிழா ! விழி ! எழு !
உறங்கி உறங்கியே நீ இழந்தவைகள் ஏராளம் !
உடனடியாக நீ விழி ! எழு !
உண்ணும் உணவில் தாய்த்தமிழ்
இல்லை !
------உடுக்கும் உடையில்
தாய்த்தமிழ் இல்லை !
பண்ணும் தொழிலில்
தாய்த்தமிழ் இல்லை !
------படிக்கும் பள்ளியில்
தாய்த்தமிழ் இல்லை !
விண்ணில் மண்ணில்
தாய்த்தமிழ் இல்லை !
------விளையாட் டிலுமுன் தாய்த்தமிழ் இல்லை !
எண்ணிலடங்காத் துயரில்
தாய்த்தமிழ் !
------என்றைக் குத்தான்
விழிப்பாய் தமிழா !
அணியணி யாக வேற்றார் வருகை –
------அத்துணை இடத்திலும்
அவரே ஆள்கை !
வணிகம் எல்லாம் சேட்டுகள்
கையில்-
-------வாடுது தமிழகம்
உனக்கிலை கவலை ?
பிணியாய் நம்மைப் பிழியுது
வடக்கு ! –
--------பெருமைகள் எல்லாம்
கலையுது கனவாய் !
மணித்தமிழ் மெல்ல அழியுது
நாட்டில் -
--------மடையா நீயினி விழிப்பது என்றோ ?
ஒற்றுமை இல்லாத் தமிழா ! –
உன்னால்
--------உடையுது புகழும்
மானமும் மொழியும் !
அற்றது நம்மிடம் பண்பும்
அன்பும் !
-------அறிவையும் இழந்து
உரிமையும் இழந்தால்
வெற்றுரை பேசும் வீணர்கள்
என்று,
--------வேற்றார் நம்மை
ஏசுவர் தமிழா !
இற்றைப் பொழுதே விழித்திடு
தமிழா !
--------இனியொரு விடியல்
உனக்கிலை இல்லை !
வை . வேதரெத்தினம்
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ
(02-03-2025)
-------------------------------------------------------------------------------------------