என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 7 மார்ச், 2025

பாடல் (74) தமிழா ! விழி ! எழு !

தமிழ்நாடு புலவர் பேரவையின் இணைய வழிப் பாட்டரங்கில் 01-02-2025 அன்று  முன்னிலை வகித்து நான் அரங்கேற்றிய பாடல் ! 

-------------------------------------------------------------------------------


தமிழா  ! விழி  ! எழு !

உறங்கி உறங்கியே  நீ இழந்தவைகள் ஏராளம் !

உடனடியாக  நீ விழி ! எழு !

 

உண்ணும் உணவில் தாய்த்தமிழ் இல்லை !

------உடுக்கும் உடையில் தாய்த்தமிழ் இல்லை ! 

பண்ணும் தொழிலில் தாய்த்தமிழ் இல்லை !

------படிக்கும் பள்ளியில் தாய்த்தமிழ் இல்லை !

விண்ணில்  மண்ணில்  தாய்த்தமிழ் இல்லை !

------விளையாட்  டிலுமுன்  தாய்த்தமிழ் இல்லை ! 

எண்ணிலடங்காத் துயரில் தாய்த்தமிழ் !

------என்றைக் குத்தான் விழிப்பாய்  தமிழா !

 

அணியணி  யாக வேற்றார் வருகை –

------அத்துணை இடத்திலும் அவரே ஆள்கை !

வணிகம் எல்லாம் சேட்டுகள் கையில்-

-------வாடுது தமிழகம் உனக்கிலை  கவலை ?

பிணியாய் நம்மைப்  பிழியுது  வடக்கு ! –

--------பெருமைகள் எல்லாம் கலையுது கனவாய் !

மணித்தமிழ் மெல்ல அழியுது நாட்டில் -

     --------மடையா நீயினி  விழிப்பது என்றோ ?

 

ஒற்றுமை இல்லாத் தமிழா ! – உன்னால்

--------உடையுது புகழும் மானமும் மொழியும் !

அற்றது நம்மிடம் பண்பும் அன்பும் !

-------அறிவையும் இழந்து உரிமையும் இழந்தால்

வெற்றுரை பேசும் வீணர்கள் என்று,

--------வேற்றார் நம்மை ஏசுவர் தமிழா !

இற்றைப் பொழுதே  விழித்திடு  தமிழா !

--------இனியொரு விடியல் உனக்கிலை  ல்லை ! 

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(02-03-2025)

-------------------------------------------------------------------------------------------

 


 

 

 

 

 

 

ஞாயிறு, 2 மார்ச், 2025

பாடல் (73) தமிழா ! இது தமிழா ? பாட்டரங்கத்தில் எனது கவிதை !

தமிழ்நாடு புலவர் பேரவை சார்பில் 01-03-2025 அன்று இணையவழியில் நடைபெற்ற பாட்டரங்கத்தில்  முன்னிலை வகித்து நான் படைத்த கவிதை !

----------------------------------------------------------------------

 

தமிழா !

      இது தமிழா !

          உன் நாவினிலே தவழுமொழி தமிழா ! 

               அட , தமிழா !

 

அமிழ்தான   செந்தமிழை   

       எங்குதான்    தொலைத்தாயோ ?

              ஆங்கிலமாம்    உமிகலந்து   

                     அரைக்கிறதே   உன்வாய்தான்  !

உமிஎன்றும்   உமிதான்,   

       அதுஉன்மொழிக்கு   ஈடாமோ ?

              உன்தமிழைச்    சிதைக்கின்றாய் !   

                     உனக்கெதற்கு   வெள்ளாடை ?  

 

தனித்தமிழில்    பேசுதற்குத்    தகவிழந்தாய்   தமிழ்மகனே !

------தரம்குறைந்தாய்,    பிறமொழியைத்   தழுவுகின்றாய்,   நின்னுரையில் !

நுனிநாக்கில்    ஆங்கிலத்தைக்    கொண்டுவந்து    இருத்திவிட்டாய் !

------நுந்தமிழை   வீழ்த்திவிட்டு   நொண்டுகிறாய்    தமிழ்பேச !

 

சுரணைகெட்டு  அலைகின்ற  சோம்பேறித்  தமிழ்மகனே   !

------சொந்தமொழி    வீழந்துவிட்டால்    சோறுனக்கு   யாரிடுவார் ?

திரணைதனைத்    தின்றுவிட்டுத்    தெருத்தெருவாய்    அலைவாயோ   ?

------தீந்தமிழா  !    சிந்திக்கும்    திறமதையும்    இழந்தனையே  ?

 

ஆறறிவு   உருவிருந்தும்   பகுத்தறிவு   உனக்கிலையே ?  

------அருந்தமிழைத்    தள்ளிவிட்டு   ஆங்கிலத்தைப்   போற்றுவதா ? 

சாறுதனை   ஒதுக்கிவிட்டுச்   சக்கைதனை   உண்ணுவதோ ?

------சல்லியெனத்    தாழ்ந்துவிட்ட    சாரமிலாத்    தமிழ்மகனே  !

 

பள்ளிகளில்    கல்லூரிப்    படிப்புகளில்    ஆங்கிலம்தான் 

------பயிற்றுமொழி  அலுவலகப் பயன்பாட்டில் வெள்ளைமொழி 

கள்ளிச்    செடிகளுக்குக்    காலமெலாம்      நீர் வார்க்கும்

------காளவாய்த்    கமிழ்மகனே    கண்ணிரண்டும்    குருடாமோ ?

 

ஆங்கிலத்தை    அகற்றிவிட்டு    அருந்தமிழைக்    கையிலெடு !

------அறிவிழந்து     மொழிக்கலப்பில்     அமிழ்ந்துவிளை     யாடாதே !

தேங்கனியாம்     தமிழுக்குத்     தீங்குவிளை     மொழிக்கலப்பை

------திண்ணமுடன்     விட்டுவிடு !     தென்னவனே     மாறிவிடு !

 

அறிவார்ந்த      தமிழ்மகனாய்       அடலேறே       மாறிவிடு !

------அரசியல்     சகதிகளில்      அரத்தமதைச்      சொரியாதே !  

செறிவான     சிந்தனையைக்    கையிலெடு,       கிளர்ந்துஎழு !  

------செம்மாந்த     தமிழ்மொழியைப்     போற்றிடுக  !    காத்திடுக !

 

வீட்டிற்குள்   ஆங்கிலத்தின்     விளைச்சலதை    அழித்துவிடு !

------வெறியூட்டும்      திரையுலக       வீணர்களை      வீழத்திவிடு !

நாட்டிலினிக்        கலப்புமொழி       நாகரீகம்       ஒழியட்டும்  !!

--------நம்மொழியைக்      காத்திடுவோம் !     நல்லவர் காள் !   அணி திரள்க !

 

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(02-03-2025)

-------------------------------------------------------------------------------------------