என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 4 ஜூன், 2022

பாடல் (39) (1970) வணக்கத்திற்குரியவரே ! அவையின் ஏறே ! (சு.அரங்கராசன்) !

------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டையிலிருந்து சென்னை, இயக்ககத்திற்கு

இடமாற்றலாகிச் சென்ற

அலுவலக மேலாளர் திரு. சு. அரங்கராசன் அவர்களுக்கு

அளிக்கப்பெற்ற தேனீர் விருந்தின் போது நான் ஆற்றிய உரை !

(நாள் : 30-04-1970)

-------------------------------------------------------------------------------------

 

வணக்கத்திற்     குரியவரே       

…..அவையின்      ஏறே !

……….வருத்தமுடன்    பிரிவோலை     

……………ஏற்கும்          கோவே !

 

கணக்கற்ற       பெருந்துயரில்   

…..வாடும்           நண்ப !

……….கசிந்துருகித்      தடுமாறி        

……………மன்றம்          ஏறி ,

 

வணங்குகிறேன்  கரங்கூப்பி      

…..கண்ணீர்         சிந்தி ,

……….வதைபடுமென்   நெஞ்சத்தைப்    

……………படம்பி           டித்து ,

 

பணங்கோடி      தந்தாலும்       

…..ஈடா              காத ,

……….பாசத்தால்        காட்டுதற்கு      

……………உவந்தேன் ;     வந்தேன் !

 

------------------------------------------------------------------------------------

 

கூடுகட்டி            வாழ்ந்தகுயில்     

…..வீடுவிட்டுப்          போகுது ! அதன்

……….குஞ்சுகளின்         பிஞ்சுமனம்        

……………வெந்துமணல்       ஆகுது !

 

பாடிநின்ற           பேடுஇன்று          

…..வாடிநெஞ்சு         வேகுது ! அதன்

……….பாதுகாப்பில்        வாழ்ந்தகுஞ்சு      

……………பிரிவுகண்டு         நோகுது !

 

ஓடிவந்த            காடைகளைச்      

…..சாடிவந்த            பேடையும் பிரிவு

……….ஓலையெனும்      வலையினின்று    

……………மீட்சியின்றி         உழலுது !

 

கூடிநின்று          இன்பமுடன்        

…..ஆடிவந்த            பறவைகள் இன்று

……….கூறுபட்டு           அன்னையின்றி    

……………குமுறுகின்றது       ஐயகோ !

 

------------------------------------------------------------------------------------

 

நாடிவந்து           சாடுகின்ற          

…..பேடிகளாம்          தீயோர் ,

……….நாவறுத்து           சிரமொடித்த        

……………படைத்தலைவன்    அங்கே !

 

வாடிநின்று          ஆடிவழி            

…..தேடுகின்ற          வேங்கை ,

……….வலிபடைத்தும்      சோர்வுகொண்ட   

……………வீர்ர்களோ          இங்கே !

கூடிவந்து           பாடிநின்று         

.....கோடுவெட்டும்      தீயோர்

……….குலையறுத்து       அடிமிதித்த         

……………படைத்தலைவன்    அங்கே !

 

மிடியகற்றித்        துடிதுடிக்க         

…..படைநடக்கும்       மறவர் ,

……….மனமொடிந்து       வலிவிழந்து        

……………மயங்குவதோ       இங்கே !

 

குடியிருந்த          கோயிலிடை       

…..இடியும்வந்து        வீழ்ந்தால் ,

……….குடல்கலங்கும்      குழவியரின்        

……………புகலிடந்தான்        எங்கே ?

 

விடிந்தவுடன்        ஒளிபெருக்கும்     

…..விரிகதிரோன்       அன்றி ,

……….விட்டிலொளி        பயன்தருமா ?      

……………வளம்பெறுமா       வாழ்வே ?

 

-------------------------------------------------------------------------------------

 

அணிமிகுத்து        பணிமுடிக்க       

…..வழியனுப்பும்        தந்தை ,

……….அடியெடுத்து        நடைமுடித்து       

……………கடலடுத்துப்         போந்தார் !

 

துணிவுதந்து        பிணிவிலக்கி      

…..அரணமைத்த        தோன்றல் ,

……….தொலையிடத்து     அலைமுகத்து      

……………களையிழந்து       சென்றார் !

 

மடியிருத்தி          அடிசிலூட்டி        

…..கொடியிலிட்ட       அன்னை ,

……….மனம்வளர்த்த       நினைவுதிர்த்து     

……………நெடும்பயணம்      சென்றாள் !

 

செடிகளைந்து       சுடுமணலில்        

…..படியவைத்தல்       போல ,

……….சேய்களிங்கு        நோய்களுற்றோம் 

……………தாய்மறைந்து       சென்றாள் !

 

-----------------------------------------------------------------------------------

 

தடமமைத்து        வழிநடத்த          

…..பணிசுமந்த          தலைவா ! - இன்று

……….தடம்பிறழ்ந்து       எமைப்பிரிந்து      

……………செல்வதுவும்        முறையா ?

 

குடமெடுத்து        அறிவுமொண்டு    

…..அருந்தவைத்த       தந்தாய் ! இன்று

……….குடம்விடுத்து       எமைத்துறந்து     

……………ஏகுவதும்            சரியா ?

 

நடைபழக்கி         உடைதிருத்தி       

…..அருள்கொடுத்த     தாயே ! இன்று

……….நடந்துசெலப்        பணித்துவிட்டு     

……………விரைந்தனையே    தகுமா ?

விடைகொடுக்கக்   குழுமியுள்ள        

…..வீர்ர்களின்          இறைவா ! எங்கள்

……….விழியிரண்டும்      விதும்பலுற்று       

……………நீருகுதே !           நிறைவா ?

 

------------------------------------------------------------------------------------

 

உயர்பணிக்கு       அழைத்திடுவார்    

…..வாழ்த்திடுவோம்    என்றே

……….உள்ளமதில்         எண்ணமுற        

……………உவந்திருந்தோம்;    ஆனால் ,

 

பயிர்வளர்க்கும்     காவலனே         

…..வந்திடுக            என்றார் ,

……….பரிசுமக்குப்          பிற்றைநாளில்     

……………தந்திடுவோம்        என்றார் !

 

உயிர்கலந்து        உறைந்தொழுகும்  

…..ஒளிக்கதிரே         இன்று ,

……….உளம்வருந்த        விடைகொடுத்து   

……………அனுப்புகிறோம்     செல்க !

 

செயிர்தீர்ந்த         அரும்பணிகள்     

…..ஆற்றியயெம்        தலைவா !

……….சிந்தையெலாம்     சூழ்ந்துவர          

……………செல்லுகின்றாய்    வாழி !

 

------------------------------------------------------------------------------------

 

திரியெடுத்து         சுடர்கொளுத்தி     

……....ஒளிபெருக்கும்      அன்பே ! நின்

திருவருளால்        அறிவுயர்ந்தோம்   

……….உளங்கனிந்த        நன்றி !

கரிபடிந்த            உளக்கலசம்        

……....துலக்கிவைத்த      அன்பே ! நின்

கரமளித்த           அரவணைப்பில்    

……...உவகையுற்றோம்    நன்றி !

உரிமைகொண்ட    தாய்மையன்ன    

……...அருள்பொழிந்த     நிலவே ! நின்

உறவுகொண்டு      நன்மையுற்று       

………அகமகிழ்ந்தோம்     நன்றி !

தூரிகையாம்        நின்னழகுத்         

……...திருப்பணியால்      நாங்கள் - நின்

துடிப்புமிகு          ஓவியமாய்த்       

……....துலங்குகிறோம்      நன்றி !

 

-------------------------------------------------------------------------------------

 

அரவணைத்துச்  செல்லுகின்ற  

…..தன்மையினால்  அன்னை !

……….அருள்சுரந்து     நடத்துகின்ற   

……......அரும்பணியால்  தந்தை !

 

கரம்பிடித்து      நடத்துகின்ற   

.....காவலன்நீ       அண்ணா !

……….கைகொடுத்து    உதவுகின்ற      

……..….கருணையினால்  நண்பன் !

வழிவகுத்து     நடத்துகின்ற    

…..வகையதனால்   ஆசான் !

……….வரும்பொருள்   உரைத்துநெறி   

……………நிறுத்துவதால்   தலைவன் !

 

அழிவினின்று    காத்துஎமை     

…..ஆள்வதனால்    மன்னன் !

……….அறவழியில்     செலுத்துகின்ற  

……………அறிவொளிநீ     இறைவன் !

 

------------------------------------------------------------------------------------

 

வாழிய !             வாழி !              வாழி !

…..வளம்பெற           நீடு                 வாழி !

ஆழியைப்           போல               வாழி !

…..அருந்தமிழ்          அமுதாய்            வாழி !

ஊழையும்           வெல்லும்           தங்கள்

…..உயர்தனித்           திறமை             வாழி !

மேழியின்           அருளைப்            போல

…..மேவிய              உயிரே              வாழி !

புன்னகை           மன்னன்              தங்கள்

…..பொறுமையின்      வலிமை            வாழி !

இன்னருள்           உள்ளம்              வாழி !

…..எம்மனோர்          நினைவும்           வாழி !

 

                                        க்ம் !

 

-------------------------------=--------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 21]

{04-06-2022}

---------------------------------------------------------------------------------------------