என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 4 ஜூன், 2022

பாடல் (40) (1971) புலவர்க்கோர் அறைகூவல் !

-----------------------------------------------------------------------------------------

புலவர்க்கோர் அறைகூவல் !

புதுகையில்  பிறந்த அலைச்சீறல்

(ஆண்டு 1971)

-----------------------------------------------------------------------------------------

ஆட்சிமொழி    தமிழென்றார்     ஐம்பத்து     எட்டுமுதல் !

.....ஆயினும்  நடைமுறையில்  செயற்படலில்  விரைவில்லை !

மாட்சிமிகு    அமைச்சர்கள்,   மாணவர்கள்,     பணியாளர்,

.....மனம்வைத்தால்  செயலாக்கம்  விரையாதோ ?  வளராதோ ?

 

ஊருக்கு      ஊர்கூட்டம்       கூடுகிறீர்,    பேசுகிறீர் !

.....உருப்படியாய்     ஏதேனும்      சொல்லாக்கம்  நடந்ததுவா ?

பேருக்குச்      சிலபேர்கள்       கருத்தரங்கு   ஏறியதால்

.....பெற்றபயன்      யாதோகாண் !   பெரியீரே     சிந்திப்பீர் !

 

தமிழ்நாட்டில்   தமிழுணர்வு  நாள்தோறும்   குறைகிறது !

.....தமிழ்க்கல்வி   நிலையங்கள்   ஒவ்வொன்றாய்  மறைகிறது !

அமிழ்தான    மொழிவடிவம்    ஊடகத்தால்    சிதைகிறது !

.....அய்யகோ      இதைத்தடுக்க    அரசினர்தான்   வாராரோ ?

 

பொங்குதமிழ்     அங்காடிப்     பலகைகளால்     வீழ்கிறது !

.....புற்றீசல்    போல்பதின்மப்    பள்ளியெங்கும்     சூழ்கிறது !

தங்குதடை     இன்றிதமிழ்ப்    பேசுதற்கு     ஆளில்லை !

.....தரமில்லா   தாளிகைகள்   மொழிக்கலப்பில் மூழ்குதையா !

 

ஆன்றோரே !    சான்றோரே !    அரங்கிலுள்ள  இளையோரே !

.....அன்னைமொழி    நலிவடைதல்  அழகாமோ ? அறமாமோ ?

மன்பதையில்   நம்மொழியும்   மாண்புதனைப்   பெறவேண்டும் !

.....மனம்வைத்தால் அத்துணையும் வயமாகும் ! இஃதுண்மை !

 

கலைச்சொற்கள்   தமிழூற்றில்   ஊருணியாய்   வரவேண்டும் !

.....கற்றோர்தம்     கடனாற்றி    மொழிக்கேற்றம்  தரவேண்டும் !

அலையலையாய்  பிறசொற்கள்  மொழிமாற்றம்  பெறவேண்டும் !

.....ஆங்கிலம்போல்  நம்மொழியை  உலகறியச் செயல்வேண்டும் !

 

பேண்ட்போல்    பலசொற்கள்   தமிழ்க்குடிலில்   இன்றுண்டு !

.....பீடுடைய  இணைச்சொற்கள்  தமிழின்கண்  எவையுண்டு ?

புரியாமல்    தடுமாறும்     போதுகளாம்     எமையழைத்துப்

.....புரியவைக்க   யாருண்டு ?    புலவர்காள்     விளம்பிடுவீர் !

 

-----------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை, 

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com] 

ஆட்சியர், 

"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 21]

{04-06-2022}

----------------------------------------------------------------------------------------

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக