என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 7 ஜூன், 2022

பாடல் (43) அனைவர்க்கும் வணக்கமென் அன்பார்ந்த ! (இராசாமணி)

------------------------------------------------------------------------------------

நாகைக்கு இடமாற்றலாகிச் செல்லும்

இளநிலை உதவியாளர் திரு. இராசாமணிக்கு

அளித்த தேனீர் விருந்தின் போது

நான் ஆற்றிய உரை !

(ஆண்டு 1971)

-------------------------------------------------------------------------------------

 

அனைவர்க்கும்   வணக்கமென்   

…..அன்பார்ந்த       நன்றி !

……….முதான         தமிழேநீ         

……………அருள்தந்து       வாழ்த்து !

 

 

பசும்புல்          நுனிவாழும்    

…..பனித்துளியாய்    சிலகாலம்

……….பழகியின்று      எமைவிட்டுப்    

……………பறந்துசெலும்     நன்னண்ப !

 

விசும்பின்        துளிவீழ்ந்த      

…..வெண்மணலாய்  நெஞ்சமதில்

……….வேதனையைத்  தூவியின்று      

……………விரைந்துசெலும்  என்னன்ப !

 

கரும்பின்         சுவைபோலக் 

…..கற்கண்டாய்      நீர்பழகிக்

……….கனிவோடு       என்னுடைய     

……………கருத்தொத்த      துணையானீர் !

 

இரும்பின்        மனவலியும்     

…..இணையில்லாச்  செயல்திறனும்

……….இணைந்திங்கு   சிலதிங்கள்      

……………எம்முடனே       பணிபுரிந்தீர் !

 

விரும்பிப்         பிரிவோலை    

…..வேண்டியின்று    நாகைக்கு

……….விரைகின்றீர்     எமக்கதுவோர்  

……………விளம்பரிய        பேரிழப்பு !

நரம்பின்          துணைநாடி      

…..ஒலிகூட்டும்      வீணையென

……….நானிலங்க        நீராயின்         

……………நாகைதனை      நாடுகிறீர் !

 

இல்லத்தார்       நலங்கருதி      

…..ஏகுகின்ற         காரணத்தால் ,

……….இன்முகமாய்     வாழ்த்திவிடை  

……………கூறுகிறோம் !    போய்வருக !

 

முல்லைத்தார்    சூடிமண         

…..வாட்டிதனை      ஏற்குமடல் ,

……….முத்திங்கள்       நிறையும்முன்   

……………முறையாகத்      தந்திடுக !

 

தொல்லைசூழ்    கணக்காயத்     

…..தேர்வெழுதி      நன்னிலையில்

……….செல்வங்கள்      யாவையுமே     

……………செறிந்தோங்க    வாழ்வுதனில் ,

 

செம்மையுற      வாழ்த்துகிறோம் !

….......வாழியநீர் !       வாழியவே !

 

வணக்கம் !

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 24]

{07-06-2022}

---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக