என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 12 ஜூன், 2025

பாடல் (78) அருட்டிரு வாசுதேவனாருக்கு மீ. கோவிந்தராசுவின் விண்ணப்பம் !

 

1980 -  ஆம் ஆண்டு வாக்கில்  தான் பணிபுரிந்த தொழிலகத்திலிருந்து  விடுபடும் பொருட்டு, தொழிலக உரிமையாளர் அருட்திரு வாசுதேவனார் அவர்கட்கு மீ. கோவிந்தராசு  அணிவித்த  நன்றிப் புகழ்  மலர் !

=======================================

(பாடல் புனைவு: வை. வேதரெத்தினம்) 

=======================================

அன்பைச்  சொரிந்து வரும் அருவி ! -- கருணை

      அழகு ததும்புகின்ற ஊற்று ! – ஒளிரும்

பொன்னில் உறவு கொண்ட மேனி ! – விழியில்

      பொங்கி வழிந்து வரும் நிலவு ! – எனது

நெஞ்சில் குடிபுகுந்த தென்றல் – அழியா

      நினைவில் வளர்ந்துவரும் கவிதை ! – அழகு

கொஞ்சும் இளம்பரிதி உதயம்  -- மின்னும்

      கூடல் இறைமகுடக்  கலசம் ! !

 

பொங்கு  மாங்கடலில்  துஞ்சி விழிதிறந்து,

       பொன்னின் மணியிறைக்கும் சுடரோன் ! – தரணி

எங்கும்  உயிரினங்கள் உயிர்த்து எழுச்சிபெற,

       இறைமை  செய்துவரும் அருளோன் ! -- ஆற்றல்

மிஞ்சும்  தொழிலகத்தின் உரிமைத் தவிசினிலே,

       அமர்ந்து  கோலோச்சும்  தலைவா !  - உம்மைத்

தஞ்சம் எனவடைந்து கெஞ்சும் இளையவனை

       “அஞ்சேல்” எனவுரைத்து அருள்க ! !


கஞ்சு இளங்குயிலின் குரலைக் கேட்டுமனம்

       குளிர்ந்து அன்பைத்  தந்து அருள்க !

பஞ்சு விழிக்கடையில் கெஞ்சும் நீர்த்துளிகள்

       படைக்கும் எளியமொழி கேளீர் ! --  மனம்

அஞ்சித்  துடிதுடித்து  அயர்ச்சி  கொண்டஎனை

      “அஞ்சேல்”  எனவுரைத்து  அருள்க !

 

வணிகத் துறையின் அடிமுடியறிந்த 

      வயமாப் பெருந் திறலோய் ! – மடல்

             வாடியபயிரின் சோர்வினைச் சகியா 

                   வளம்பொதி நீரூற்றே !

துணிவுடன் வினைகள் துல்லியமாகத் 

      துளங்கிடக்க செய்தலைவா – நின்

             தூமொழியால் எனை  ஆசீர்வதித்து 

                   அருள்செய் தருள்வாயே !

 

பிணிசூழ் நெஞ்சில் விழிநீர் துடைக்கும் 

      பேரருள் தகையோயே -இப்

            பிள்ளையின் மனதில் ! என்றும் நீங்காப் 

                  பேரிடம் கொண்டனையே !

பணிமனை தன்னில்  அணிமலராகப் 

       பழகிடும் திருமலரே ! – சிறு

              பாலகன் உரைக்கும் நன்றிகள் ஏற்று 

                    ஆசிகள் அருள்வாயே !

 

என்றும் தங்கள் ஆசியை வேண்டும்,

 மீ. கோவிந்தராசு, 

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(12 -06-2025)

-------------------------------------------------------------------------------------------

00-00-1980 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக