என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 28 மே, 2022

பாடல் (32) (1970) மணங்கமழும் பூக்காட்டில் மயங்கும் வண்ண !

-----------------------------------------------------------------------------------------

வார இதழ் ஒன்றில் வெளியான

சிறுகதையை மையமாகவைத்து

எழுதப்பட்ட கவிதை !

[ஆண்டு.1970]

                                

-----------------------------------------------------------------------------------------

 

மணங்கமழும்  பூக்காட்டில்  மயங்கும்  வண்ண,

..........மயிலென்று  எண்ணியுளம்  மகிழச்  செய்தேன் !

அணங்கவளே  மங்கையருள்  அமுதம்  என்று

..........ஆசையுடன் நெஞ்சமதில்  அமரச்  செய்தேன் !

குணத்தினிலே  கன்னியவள்  குரிசில்  என்று

..........குடியிருக்க  எனதுள்ளக்  குடிலைத் தந்தேன் !

கணப்பொழுதில்  எண்ணமெலாம்  கலையச்  செய்து

..........காரிகையாள்  உள்ளமதைக்  கனலால் சுட்டாள் !

 

தென்னையெழில்  மஞ்சமதில்  தவழும்  கிள்ளைத்

..........திருவுருவாய்  எண்ணியுளம்  ததும்பச்  செய்தேன் !

கன்னிமகள்  பொங்குதமிழ்க் கவிதை  என்று

..........கற்பனையில்  சிலையெடுத்துக் களிக்கச் செய்தேன் !

புன்னகையை  மருந்தாக்கிப் பிணிசூழ் நெஞ்சின்

..........பிழைதீர்க்கும்  பூவையென உளப்பூ  தந்தேன்

மின்னலென  எண்ணமெலாம்  மேவச்  செய்து

..........மேகலையாள்  உள்ளமதைக் கனலால்  சுட்டாள் !

 

மாங்கனியின் தீஞ்சுவையில்  மகிழும்  கொன்றை

..........மணிக்குயிலாய் எண்ணியுளம் மலரச்  செய்தேன் !

பூங்கொடியாள்  குழலியருள்  பொதிகை என்று

..........புளகமுற  மனக்கதவைத் திறக்கச் செய்தேன் !

தீங்குறளின்  நெறியொழுகும்  தெரிவை என்று

..........திண்மையுடன்  நம்பியுளத் தேரில்  கொண்டேன் !

கங்குலென  எண்ணமெலாம்  கருகச்  செய்து

..........கணிகையவள்  உள்ளமதைக் கனலால் சுட்டாள் !

 

துள்ளியெழும்  வெள்ளலையில்  துவளும்  நாவாய்,

..........தூவியெழில்  வான்குருகாய்த்  தோன்றக் கண்டேன் !

கள்வழியும்  நீள்குறிஞ்சிக் கவின்பூ என்று,

..........களிப்புடனே  மனக்காவில்  கமழச் செய்தேன் !

வெள்ளிநிலா துஞ்சுமெழில்  வனிதை  நல்லாள்,

..........விழிமலரில்  துஞ்சியெழ  வேட்கை  கொண்டேன் !

பள்ளிகொண்ட  எண்ணமெலாம்  பதராய்ச்  செய்து

..........பனிமலராள்  உள்ளமதைக்  கனலால் சுட்டாள் !

 

----------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 14]

 {28-05-2022}

 ----------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக