என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 12 மே, 2022

பாடல் (21) (1969) வானுறு மதியின் தண்மை வழங்கிடும் !

===================================================

எனது பள்ளித் தோழரும்,

சென்னை, கால்நடை மருத்துவக் கல்லூரியில்

மருத்துவராகப் பயிற்சி பெற்று வந்தவருமான நண்பர், திரு.

இரத்தின. இராசேந்திரனுக்கு எழுதிய

கடித வடிவக் கவிதை

(ஆண்டு. 1969)

===================================================

 

                வானுறு       மதியின்       தண்மை

                        வழங்கிடும்       வதனம்      கொண்டாய் !

                 கானுறு        புலியின்       வீரம்

                        கழன்றிடும்       விழிகள்     கொண்டாய் !

                 தேனுறு        காந்தள்       அன்னத்

                        திகழ்ந்திடும்      இதழ்கள்     கொண்டாய் !

                 மானுறு        சிவந்த        மேனி

                        மயக்கிடும்       நகையும்     கொண்டாய் !

 

 

                 இன்புறு        நெஞ்சக்       கோயில்

                        எழுந்த         என்ஏந்தல்       ஆனாய் ! 

                 அன்புறு        தாய்போ       லானாய் !

                        அணைத்திடு   துணைவன்       ஆனாய் !

                 மன்னுறு       துன்பம்        தோன்றின்

                        மகிழ்வுடன்     உதவச்          செய்தாய் !

                 என்னரு        மணியே !     முத்தே !

                        எழுகதிர்        நீயே            யன்றோ !

 

 

                 சங்கமும்        மகர          மீனும்

                        தரளமும்         முத்தும்      தோன்றும்,

                 வங்கநீர்க்        கரையில்     வாழும்

                        வழுதியின்        தோன்ற      லே,நீ ! 

                 பொங்கிடு        மின்பம்       எல்லாம் 

                        புலனுறத்         துய்த்தல்     வேண்டும் !

                 மங்கையை      மணந்து       வாழ்வில்

                        மகிழ்வுடன்       வாழ்தல்     வேண்டும் !

 

 

                 அஞ்சன        வண்ணன்        உந்தன்

                        ஆருயிர்          இராஜ          சேகர் !

                 வஞ்சனை      அறியா           நண்பன்

                        வல்லவன்        செரீபும்        உண்டு !

                 செந்தமிழ்ச்     சிந்து             பாடும்

                        செல்வனாம்      பாலனும்       உண்டு !

                 சந்தனம்        நிகர்த்த           நண்பர்

                        சங்கமே          உனக்கு         உண்டு !

 

                                 

                 இத்தனைப்      பயனும்         பெற்று

                        எங்கோநீ        வாழு          கின்றாய் !

                 அத்தனைச்      செல்வத்         திற்கும்

                        அரசனாம்       உன்னைப்       பெற்று,

                 இக்கரை         யான்வாழ்       கின்றேன் !

                        இருப்பினும்     இன்பம்         இல்லை !

                 அக்கறை        என்பால்         உண்டேல்,

                        அன்பனே       ஒருமுறை       வாராய் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 29]

{12-05-2022}

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக