என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 15 ஜூலை, 2022

பாடல் (53) (1984) கதிரவன் ஒளியில் காரிருள் மறையும் !


குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

                      கொள்வது என்பதேது ?

                                 (ஆண்டு 1984)

-----------------------------------------------------------------------

                

கதிரவன்  ஒளியில்  காரிருள்  மறையும்

…..கருமுகில்  மறையாது ! --  முகிலின்

……….கருமையும்  விலகாது !

 

மதியுமிழ்  நிலவில்  மல்லிகை  மலரும்

…..மரையிதழ்  மலராது ! --  இதழில்

……….மதுமணம்  கமழாது !

 

உதிரும்  பனிமழை  ஒருமடு  நிறையும் !

…..ஊருணி  நிறையாது ! --  பயன்மிகு

……….நீர்நிலை  ஆகாது !

 

மதுவின்  பிடியில்  மயக்கம்  பெருகும் !

…..மகிழ்ச்சியும்  பெருகாது ! வளமுறு

……….வாழ்க்கையும்  அமையாது !

 

குழலின்  இனிமையில்  கோநிரை  மயங்கும் !

…..கொடும்புலி  மயங்காது !  -- புலியின்

……….குணங்களும் உறங்காது !

 

அழலின்  சுடரில்  அடவியும்  கருகும் !

…..அறிவொளி  கருகாது !  -- அறிவின்

……….ஆற்றலும்  உருகாது !

 

கழனியில்  செந்நெல்  கதிர்மணி  சொரியும் !

…..காழகம்  சொரியாது !  -- நீலக்

……….கற்களும்  விளையாது !

 

பழகிட  நெஞ்சம்,  மஞ்சம்  கிடைக்கும் !

…..பாசம்  கிடைக்காது !  -- அன்புப்

……….பரிவும்  இருக்காது !

 

அறுசுவை  உணவு  நலம்பெற  உதவும் !

…..அறிவுற  உதவாது !  -- உலகியல்

……….அறிந்திட இயலாது !

 

குறுமணல்  வயலில்  கரும்புகள்  வளரும் !

…..குடைவரை  வளராது !  -- கொண்டல்

……….கொஞ்சிட  வாராது !

 

சிறுகயம்  பெருகும்  புனல்மிக  இனிக்கும் !

…..செந்நீர்  இனிக்காது !  -- வழியும்

……….கண்ணீர்  சுவைக்காது !

 

நறுமண  மதுவும்  நங்கையர்  உறவும் !

…..நல்கிடும்  இன்பம்மிகும் !  -- வாழ்வும்

……….நலிந்திடத் துன்பமுறும் !

 

-------------------------------------------------------------------------

                             ஆக்கம் + இடுகை,

                          வை.வேதரெத்தினம்,

                       [vedarethinam70@gmail.com]

                                    ஆட்சியர்,

                    “தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 31]

                                     {15-07-2022}

---------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக