என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 1 ஜூலை, 2022

பாடல் (52) (1983) வரையோடு உறவாடி வானின்று ! (புத்தாண்டு வாழ்த்து)

------------------------------------------------------------------------------------------

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி

1983 சனவரி  முதல் நாள்

முதல்வர் திரு. இரா.அ.தங்கவேலு அவர்களுக்கு

வாசித்தளித்த புத்தாண்டு வாழ்த்து !

------------------------------------------------------------------------------------------

 

              { இயற்கை அளிக்கும் இனிமை ! }

 

வரையோடு   உறவாடி   வானின்று   தரைவீழும்

..........வாரியைக்  காண்பதினிது !

 

கரையோடு  விளையாடி  நுரையோடு  எழில்சிந்தும்

..........கலிகடல்   காண்பதினிது !

 

மரையோடு  உறவாடி  மணமோடு  இசைபாடும்

..........மலரூதி  காண்பதினிது !

 

நரையோடு  திரைசூழ்ந்த  நல்லோர்தம் உளமார்ந்த

..........நல்லாசி  காண்பதினிது !

 

              { புத்தாண்டு காண்பதும் இனிது ! }

 

புதுப்புனல் காண்பதினிது ! -  மலரும்

.....பூவிதழைக்     காண்பதினிது !

..........பொன்னிலவைக்     காண்பதினிது ! - மழலைப்

................புன்னகையக் காண்பதினிது !

 

மதுக்குயில்     காண்பதினிது ! ஓடும்

.....மான்மறியைக் காண்பதினிது !

..........மாந்தளிரைக்  காண்பதினிது ! தோகை

...............மயிலினம்   காண்பதினிது !

 

செம்பரிதி   காண்பதினிது ! துள்ளும்

.....செம்மீன்கள்   காண்பதினிது !

..........சூல்முகிலைக்   காண்பதினிது ! வானில்

...............சூழ்வில்லைக்   காண்பதினிது !

 

அம்புயத்தைக்   காண்பதினிது ! வீழும்

.....ஐந்தருவி   காண்பதினிது !

..........ஆலயத்தை  காண்பதினிது ! புதிய

...............ஆண்டுதனைக்     காண்பதினிது !

 

           { புத்தாண்டு நாளில் நமது கடமை ! }

 

ஓராண்டு      காலத்தில்     உற்றபயன்    செய்தவினை

..........உன்னித்துப்     பார்க்கவேண்டும் !

       

சீராண்டு     நேராண்டு     செயத்தக்க    செயலாண்டு

..........செய்தபணி     எண்ணவேண்டும்!

       

தாராண்டு     நேயமுடன்    தாளாண்மை   மேற்கொண்டு

..........தாம்செய்த    தெண்ணவேண்டும்!

       

ஏராண்டு     உலகூட்டும்     எளியோர்க்கும்    ஏழைக்கும்

..........இயற்றியன    எண்ணவேண்டும்!

 

 { நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி }

 

கருவாகி !        உருவாகி !        கனிவாகி !     பணிவாகி !

..........காசினியில்       வாழும்         மாந்தன் !

ருவாகி !        அருவாகி !       இயற்கைக்கு   இரையாகி !

..........இவ்வுலக        வாழ்வை       நீங்கி !

சருகாகி !         உதிர்வதனால்    சாதித்த     பயனென்ன ?

..........சமுதாய          வீதி            தன்னில் !

தருவாகி !        உறவுக்குத்        தணியாத       நிழலாகி !

..........தகையாளன்      ஆவ            தன்றோ ?

 

புத்தாண்டு        நன்னாளில்      புகழோடு       செயலாற்றப்

..........புடைசூழ         உறுதி          கொள்வோம் !

 எத்தடைகள்      வந்தாலும்        எதிர்கொண்டு  வலிவோடு

..........எல்லோர்க்கும்   நன்மை        செய்வோம் !

இத்தரையில்     அன்புதனை      வித்தாக்கி      எல்லோரும்

..........இனிமையெனும் நெல்லை       விளைப்போம் !

த்துவிளை      முத்துஎன        எத்தினமும்    புத்துவகை

..........நத்திமிகத்        தொண்டு       புரிவோம் !

 

                                               { புத்தாண்டு வாழ்த்து ! }

 

இலக்கியமாம்    கடல்மூழ்கி    எண்ணற்ற    சுவடிகளில்

..........எழில்முத்தக்     கருத்தை       ஏந்தி,

துலங்கமுதப்   பொறியியலில்   துறைபோகி   சட்டவியல்

..........துய்க்கவுளம்     நாடி        இன்று,

அலங்கலுடை   மாலவனாய்   நெடிதுயர்ந்து  இலங்குமெங்கள்

..........அன்பிற்கு        உரிய           கோவே !

புலமைமிகு       தங்களுக்குப்     புத்தாண்டு      வாழ்த்துதனைப்

..........பூந்தமிழால்      கோத்தோம்    வாழி !!


-------------------------------------------------------------------------------------- 



ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 17]

{01-07-2022}


--------------------------------------------------------------------------------------

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக