என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 26 ஜூலை, 2022

பாடல் (59) (2019) கிருபானந்தனின் மாமனார் எழுபதாம் அகவை நிறைவு -வாழ்த்துப்பா !

-----------------------------------------------------------------------------------------------------
மின்வாரியத்தில் 
பணிபுரியும் பொறியாளர், 
நண்பர் திரு. கிருபானந்தனின் மாமனார்
எழுபதாம் அகவை நிறைவு செய்வதை  முன்னிட்டு, 
அவரது இல்லத்தினரால்  எடுக்கப் பெற்ற  விழாவில்,
 திரு.கிருபானந்தனால் வாசித்து அளிக்கப் பெற்ற
வாழ்த்துப்பா !
 எழுத்து: வை.வேதரெத்தினம்:
 வாசிப்பு: திரு,கிருபானந்தன் !
(2019)
-------------------------------------------------------------------------------------

வணங்குகிறோம் ! வாழ்த்துங்கள் !!

           
எழுபதாண்டு      நிறைவுபெறும்      
..........எம்குலத்தின்      திருவிளக்கே !
இராதாமணி       மணவாளன்        
..........பெயர்விளங்கும்   எழில்முகிலே !
பழுமரமாய்,       ஊருணியாய்,       
..........பகலவனாய்,       திகழொளியே !
பால.புஷ்பா       கரம்பிடித்த         
..........பால்மதியே !      அருள்நிதியே !
வழுவகல        வாழ்வாங்கு        
..........வாழ்தகையே !     தீங்கனியே !
வல்லாங்கு       வாழ்ந்திடுக!       
..........வணங்குகிறோம் ! வாழ்த்துவையே !
செழும்புனலே !   இல்வாழ்வின்     
 ..........செங்கரும்பே !     விழுமியமே !
செந்தூர          மரைமலரே !      
 ..........நூறகவை        வாழ்குவையே !!


வேளாண்மைக்    குடியுதித்த         
..........விடிவெள்ளித்      திருமுகமே !
விழுதூன்றிச்      சாரத்தில்           
..........விளைந்திட்ட     நென்மணியே !
தாளாண்மை      மீதூரும்           
..........தரணிபுகழ்         தொழில்மகவே  !
தண்பொழிலாய்   வழித்தோன்றல்    
..........வாழ்வுயரச்       செய்தனையே  !
கோளரிமா        மருமகனார்        
..........குலம்தழைக்க     வாழ்த்திடுக !
கோபுரமே !       நின்குலத்துக்       
..........கொடிகளெலாம்   வணங்குகிறோம் !
நாளரும்பு        மணம்திகழும்      
..........நவநிதியே !        வணங்குகிறோம் !
நலமுயர்ந்து      யாம்வாழ          
..........நான்முகனே !     வாழ்த்திடுக !


கற்றறிந்த        பள்ளிகட்குக்       
..........கார்முகிலாய்       நூல்தந்தாய் !
கனிவுடனே       கோவிலுக்குக்      
..........கால்பதிக்கக்      தளம்தந்தாய் !
பொற்கிழியாய்    ஏழையர்க்குப்      
..........பொருள்தந்தாய் !   கரம்தந்தாய் !
பொன்றாத        புகழ்பூத்தாய் !      
..........பூமான்நின்        புதல்விகளை
அற்புதமாய்க்     கல்வித்தேர்த்       
..........தவிசினிலே        அமர்த்திட்டாய் !
ஆற்றல்மிகு      பொறிஞர்களை     
..........அவர்தமக்கும்     மணமுடித்தாய் !
பெற்றாயே !      பெயர்விளங்கப்     
..........பெயரன்கள்,           பெயர்த்திகளை !
பெருந்தகையே !  வணங்குகிறோம் ! 
..........வாழ்த்துவையேவளம்பெருக !!

-------------------------------------------------------------------------------------

                                 எழுத்து: வை.வேதரெத்தினம்: 
                               வாசிப்பு: திரு,கிருபானந்தன் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் +இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 10]
{26-07-2022}
-----------------------------------------------------------------------------------
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக