என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

பாடல் (09) (1966) பஞ்சத்தில் வாடிடும் ஊழியர்க்கு !

=================================================

உணர்ச்சி நிறைந்த ஓவியம் !  ஊழியர்களின் காவியம்

  (1966- ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

=================================================

 

 

பஞ்சத்தில்     வாடிடும்    ஊழியர்க்குப்      படி

    பத்துப்        பதினோரு    ஏழுகளாம் !   -  மலர்

மஞ்சத்தில்    ஆடிடும்     மந்திரிக்கு        முழு

    மாதத்தில்    ஓரிரு        ஆயிரமாம் !   -  அவர்

நெஞ்சத்தில்   ஊறிடும்     எண்ணத்திலே    தினம்

    நல்லதையே    எண்ணி    நாடுவராம் !   -  இன்னும்

கொஞ்சத்தில்  மக்களைக்   கூண்டுடன்  கயிலையைக்

    கண்டிட      நல்வழி      கூறுவராம் !

 

 

தங்கத்தில்    கூடிய        தஞ்சைதனில்    குடல்

    தாளமிடும்      ஒலி          கேட்குதையா !  -  தமிழ்ச்

சங்கத்தில்     பாடிய       மாமதுரை        பிணம்

    சாய்ந்திடும்     கொடுமை     காணுதையா !   -  கடல்

வங்கத்தில்     தோன்றிடும் ஊழிப்புயல்      மனை

    மாடுகளைக்     காவு         கொள்ளுதையா ! -  உயிர்ச்

சிங்கத்தில்     பயணம்      செயவல்ல      தீரர்கள்

    செத்து          மடிகின்ற      நாடிதையா !

 

பானைதனில்    படி        நெல்லுமில்லை !   பசி

    பஞ்சமிலா     உயிர்         யாதுமில்லை !   -   தினம்

சேனைதனில்   கெல்லி    மாவெடுத்துக்       களி

    செய்திட        உப்பிற்கும்   காசுமில்லை !   -   இவர்

யானைதனில்   புடை       சூழவரப்            புகழ்

    பாடிவரத்      தடை       ஏதுமில்லை !   -    கொலைத்

 தானைதனில்   தனி       வாகையுடன்        பெரும்

    பீடுநடை      இடக்         கூசவில்லை !

 

 

 மாட்சிதனில்    மிக்க      மன்னர்கள்      தோன்றிய

     மாரிவளம்      கொண்ட     நாடுஇது !      -  இன்று

 காட்சிதனில்    சில       தூரிகையின்     முனை

      காட்டிட        நோக்கிடும்   பேறுஅது !      -  மனச்

 சாட்சிதனில்    சதிர்       ஆடிடும்         காங்கிரஸ்

      மீட்டிடும்       வீணையின்   ஊளையெது ?   -  அவர் 

 ஆட்சிதனில்    உளம்      நொந்திடும்      பாமரர் 

      கூவிடும்       வீட்சியின்     ஓசையது !

 

 

 ஆறுதனில்    பொடிக்     கூழையுடன்    கடல்

     ஆடிடும்       வெண்மணல்   வேகமுடன்    -  விலை

 ஏறுதெனில்    எலி        உண்டுயிர்      வாழ்ந்திடக்

     கூறிடும்       கீழ்நிலை       ஆட்சியிலே !  -  ஒரு

 கூறுதனில்     விலை     மாறுதலைச்     சிரம்

     கொய்து       மரித்திடா       ஆட்சிதனை   -  தேர்தல்

 சேறுதனில்     வெகு      ஆழமதில்       துயில்

     செய்திட       வைப்பதும்      நம்பணியே !

 

-----------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 27]

{10-04-2022}

----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக