என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 1 மே, 2022

பாடல் (17) (1968) நீலமுகில் திரைவானில் நீந்திவரும் !

===================================================

காஞ்சித் தலைவன்

மறைந்த நேரத்தில் எழுதிய

கவிதை !

(1968 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

===================================================

 

நீலமுகில்  திரைவானில்  நீந்திவரும்  வெண்மதிபோல்,

    நெஞ்சத்    திரைக்கடலில்    நீமிதந்து     ஆடுகிறாய் !

கோலமிகுத் திருமலரில்  குடியிருக்கும்  தேன்துளிபோல்

    குவளைவிழிக்  கண்மணியில்  கொற்றவன்நீ  ஆடுகிறாய் !

 

ஏட்டினை   எடுக்கையிலே   எண்ணமதில்   ஆடுகிறாய் !

    எழுத்தாகத்   தூவலதின்    கூர்முனையில்   ஓடுகிறாய் !

பாட்டினை  வடிக்கையிலே  பண்ணமைத்துப்  பாடுகிறாய் !

    பைந்தமிழைப்   பாடுகையில்   நாநுனியில்   பேசுகிறாய் !

 

ஏழையுளத்    தாமரையில்   இன்பநடம்    ஆடுகிறாய் !

    இயலிசை  நாடாகமாம்   தமிழ்க்கோயில்   வாழுகிறாய் !

தாழைமடல்   பூவையிடம்  தங்கையுரு  எய்துகிறாய் !

    தாளாளர்   உள்ளமதில்    தந்தைபணி    ஆற்றுகிறாய் !


அழுகின்றோர்  நெஞ்சமதில்  அன்னையெனத் தோன்றுகிறாய் !

    அன்புநிறைத்   தம்பியிடம்    அண்ணனுற     வாடுகிறாய் !

உழுபடையாம்    வேளாளர்     தொழிலாளர்    மாணவர்கள்,

    உள்ளவரை  அண்ணாநீ   ஒளிவிளக்காய்   வாழ்ந்திடுவாய் !

 

====================================================

ஆக்கம் + இடுகை, 

வை.வேதரெத்தினம், 

[vedarethinam70@gmail.com] 

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பிவலைப்பூ.

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022|

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக