என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 17 மே, 2022

பாடல் (24) (1969) பெற்று வளர்த்தவளே ! (ஓவியத்தை வைத்து ஒரு பாட்டு )

 

-----------------------------------------------------------------------------------------

ஓவியத்தை  வைத்துக்கொண்டு  உருவாக்கிய

ஒரு சொல்லாரம் !

நண்பர் தருமராசனுக்காக !

(ஆண்டு 1969)

-----------------------------------------------------------------------------------------

 

 

பெற்று   வளர்த்தவளே ! பெருமைமிகு  என்தாயே !

…..பிழிந்த     கனிச்சாறே !   பிழையறியா   நல்லமுதே ! !

கற்றுத்   துறைபோன  கலைமகளே !  யாழிசையே !

…..கண்ணான தந்தையெனைக்  கடிந்துகொள்வ தேனம்மா ?

புற்றில்  ஒளிந்துறையும்  புல்லரவாய்ச்  சீறிவிழப்

…..பூண்பிடித்தக் கைத்தடியால்  புண்செய்தார்  தந்தையெனை !

பற்றும்  முறிந்ததுவோ ?  பாசமகன்  என்தலையில்

…..பட்டவடு  அவர்நெஞ்சில்  பைங்குருதிச்  சொட்டாதோ ?

 

துள்ளும்    இளவயதில்   துணிவுமிகல்   ஆகாதோ ?

…..துடிப்புமிகு   ஆண்மகனும்    காதலுறல்   தாளாதோ ?

புள்ளும்    பேடையுடன்    வாழ்ந்திடுதல்  தாளாதோ ?

…..பூவையுடன்  பழகுதற்கு உரிமையெனக் கீங்கிலையோ ?

 

அன்னையெனும்  பெருமைசால்  அணிமிகுந்த  என்தாயே !

…..அழைத்துவந்தேன்  காரிகையை  இழைத்தபிழை  நீகூறு !

புன்னைமலர்  போல்சிரிக்கும் அன்னவளைப்  பாராய்நீ !

…..பூத்திருக்கும்   குவளைவிழி   அன்புமொழி  கேளாய்நீ !

 

பொன்னுடலில்  இழைந்தாடும் பொறையுடைமை   பாராய்நீ !

…..பொலிந்துவரும்  நாணமிசை  குழலொலியைக் கேளாயோ ?

மன்னவனாம்  என்னுடைய  மனங்கவர்ந்த  மங்கையவள்,

…..மாலையிடத்  தடைசெய்தல்  மாண்பாமோ தாயேசொல் ?

 

நெஞ்சத்தால்  உயர்ந்திருக்கும்  நீலமணிக்  கோபுரமே !

…..நேசமுடன்   கரம்நீட்டு !   நீயெனக்கு   அருள்செய்வாய் !

அஞ்சுகத்தின்  மணிவிழியில்  அதன்சிறகே குத்திவிட்டால்,

…..அழிவதன்றி   வாழ்வேது ?    அரற்றுவதால்   பயன்எது?

 

பிஞ்சுவுடல்    வாடுமுன்னர்   பெற்றவளே  நீயருள்வாய் !

…..பிரிவென்னை    வாட்டாமல்   பெற்றவளே   காத்திடுக !

தஞ்சமென     வந்துவிட்டேன்     தாயேநீ     மனமுருகு !!

…..தந்தையிடம்   கூறியெமை  அரவணைத்து   வாழ்த்திடுக !   

 

-----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ’

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 03]

 {17-05-2022}

 ----------------------------------------------------------------------------------------

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக