என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 20 மே, 2022

பாடல் (26) நீலத் திரைவானில் நீந்திவரும் (திருஞானம்) !

-----------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு 

இடமாற்றாலாகிச்

செல்கின்ற அலுவலக உதவியாளர்

கு.ப.திருஞான சம்பந்தத்திற்கு அளிக்கப்பெற்ற 

தேநீர்

விருந்தில் நான் ஆற்றிய உரை !

(ஆண்டு 1969)

-----------------------------------------------------------------------------------------

 

நீலத்   திரைவானில்   நீந்திவரும்   ஆழியவன்

நிலமடந்தைக்   கண்மணியாம்   நீள்கடலை   மாலையிட்டான்.

கோலத்   திருமழலைக்   கொண்டலதைச்   சேயாக்கி ,

குடகுமலை   மாளிகையில்   கொண்டுவிட்டான்  கண்மலர !

 

காலைக்     கருக்கலதில்   கட்டவிழும்    மொட்டிதழாம்

…..காவிரியாள்   கடலாடக்   கீழ்த்திசையில்   பாய்ந்தோட ,

ஓலைச்   சருகாக   உலர்ந்துவிட்ட   ஞாலமலர்

…..உயிரூட்ட   வந்தவளை   உரைத்திடுவார்   பொன்னியென!

மாலைப்   பிணியுற்று   மயக்கமுற   சோழனவன்

…..மருத்துவனாய்   வந்திட்டான்;   மகிழ்ந்திட்டாள்  திருவரங்கில் !

பாலகராம்   ஐவரினைப்   பரிசாக்கி   வரலாடும்

…..பைங்கூழின்   சிறுசாலில்   பசுமணியாள்   வாழுகிறாள் !

சீலமுறு   செல்வங்கள்   சிலம்பனையக்   காவியமாய்

…..சிந்துபல   பாடிவர  சிலுசிலுத்து   ஓடுகிறார் !

ஆலைக்   கரும்புகளும்   அருங்கதலிப்   பைங்கமுகும்

…..ஆடுதுறை   ஏடிடீ   இருபத்து   ஏழுகளும்

 

சாலைகளின்   ஓரமெலாம்   சதிராட  ஓடுகிறார் !

…..சந்தித்து   உரையாட   நம்மவரும்   ஓடுகிறார் !

பாலை   வனத்திடையே   பல்லாண்டு  பாடிவிட்டு  

…..பசுமைச்   சிறைதேடி   பைங்குயிலார்   ஓடுகிறார் ! 

 

சேலைத்   துணைநாடி   சிறுபறவை   செல்கிறதோ ?

…..சீராடும்   ஐயாற்றில்   நீராடச்   செல்குதுவோ ?

வாலை   நினைவூற்றில்   வட்டமிடும்   வான்குருகு,

…..வாழியநீ   பல்லாண்டு !   வாழியநீ   வாழியவே !

 

இப்படித்தான்   வாழவேண்டும்  என்றநல்லோர்

…..இயல்பான   வறைமுறைக்குக்  கட்டுப்பட்டு !

செப்பனிட்ட   பாதையிலே   தடம்மாறாமல் ,

…..சீராகச்   செலுத்திடுக !   வாழ்க்கைத்தேரை !

ஒப்பரிய   உத்தமர்தம்   கொள்கைச்சாலை ,

…..உறுதியுடன்   செல்வதுடன்   கடமையாற்றி ,

செப்பரியக்   கண்ணியத்தைக்   காத்துப்போற்றி ,

…..சிறப்புடனே   கட்டுப்பா    டாகவாழ்ந்து ,

வாழ்வினிலே   மென்மேலும்   நலன்கள்பெற்று ,

…..வாழ்ந்திடுக !   வாழ்த்துகிறோம் !  வாழி ! வாழி !!


-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 06]

{20-05-2022}

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக