என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 21 மே, 2022

பாடல் (27) (1969) நாட்டின் நலம் பெருக்க நாட்டமுள்ள (சிவசிதம்பரம்)

-----------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அ.தொ.ப,நி. கடைசற் பிரிவுப்

பயிற்றுநர் சிவசிதம்பரம்  -  கோமதி  திருமணம்

15—9—1969  அன்று நிகழுற்றதை

முன்னிட்டு அவருக்கு

வாசித்தளித்த வாழ்த்து மடல் ! 

(ஆண்டு 1969)

-----------------------------------------------------------------------------------------

 

நாட்டின்  நலம்பெருக்க  நாட்டமுள்ள  நற்றவனே !

…..நல்லறிஞர்  யாத்ததமிழ்  போற்றுசிவ  சிதம்பரனே !

ஏட்டில்  தடம்பதித்த  எம்மதுரைக்  குயில்மொழியே !

…..ஈடில்லா  கலைத்திறனை  இருகையால்  வழங்கபுதுக்

கோட்டைச் சுவர்ப்புறத்துக்  கோகர்ண  ஊர்க்கடையில்

…..கோதிலா பல்கலைகள்  பயிற்றுவிக்கும்  கூடமதில்

கூட்டுக்    குயிலாகக்   கூவிவரும்    கோமகனே !

…..கோமதியின்  துணைஏற்கும் மாமதுரைக்   காவலனே !

 

 *******************************************************************

 

வெண்ணிலவு  தண்மதியை

………விரும்பிமணம்  கொண்டதுபோல்,

………………வேய்ங்குழலும்  இன்னிசையைத்

………………………தன்னுயிராய்க்  காண்பதுபோல்,

 

கண்ணிமையை  மணிவிழிகள்

………காதலியாய்ப்  பேணுதல்போல்

………………காரிகையாள்  கோமதியைக்

………………………கரம்பிடிக்கும்  நீர்வாழ்க !

 

மண்ணுலகில்  இல்லறத்தின்

………மாண்புதனைப் போற்றிடுக !

………………மனத்திருளை நீக்கதிருக்

………………………குறளொளியைப்  பெற்றிடுக !

 

விண்ணுலகில்  கண்துயிலும்

………மின்மினியின்  பேருலகில்

………………விளையாடும்  வெண்மதியும்

………………………முகிலும்போல்  வாழ்ந்திடுக !

 

*******************************************************************

 

பெண்மைக்கு  உயிரூட்டிப்  பீடுபெற்ற  கண்ணகியின்

…..பிறந்தகமாம் சோணாட்டின் எழுகதிரே ! கோமதியே !

உண்மைக்கு இலக்கணமாய்  உறவிற்கோர் பெட்டகமாய்

…..உயிர்வாழ்ந்த கலையரசி  மாதவியின்  எழிற்ங்காய் !

 

பண்புநிறை  நம்தமிழர்  பண்பாடு  போற்றிடுக !

…..பாரதியின்  கனவிற்குப் பொருளாக  வாழ்ந்திடுக !

திண்மையுடன்  குறள்வழியில்  தலைநிமிர்ந்து  சென்றிடுக !

…..துணைவரது  நெஞ்சமதைக்  குடிலாக்கி  வாழ்ந்திடுக !

 

இல்லறமாம்  நீர்ச்சுனையில்  சிறகடிக்கும்  அன்னங்காள் !

…..எதிர்காலம்  தங்களுக்கு  நல்வரவு  கூறுதுகாண் !

நல்லறங்கள்  பலவாற்றி  நாவலராம்  அண்ணாபோல்,

…..நல்லதொரு காட்டாக நலமிகுந்து வாழ்ந்திடுக !

              

மெல்லிருளைக் கைவிலக்கி  மேதினிக்கு ஒளியேற்றும்,

…..மின்பரிதி  விஞ்சுபுகழ்  மேவுதமிழ்  போல்வாழ்க !

நல்விழைவைச்  சொல்லாக்கி  நான் தருவல்  வாழியவே !

…..நானான்கு  செல்வமுடன்  வளம்பெருக வாழியவே !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 07]

{21-05-2022}

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக