என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 24 மே, 2022

பாடல் (28) (1970) நீலத் திரைவானில் நீந்திவரும் (படத்துக்குப் பாடல்) !

===================================================

குமுதம் இதழில் வெளியான

 ஒரு படத்தை  வைத்துக் கொண்டு

 எழுதிய   ஒரு  கவிதை !

(ஆண்டு 1970)

===================================================

          

நீலத்  திரைவானில்  நீந்திவரும்  வெண்மதிபோல்

…….நின்வதனம்  தோன்றுவதேன் ?  நிலவு முகத்தினிடை

சேலிரண்டு  துள்ளுவதேன் ?  செந்தமிழின்  காவலனாம்

…….சேரன் புகழ்பாடிச்  செங்கோட்டை மீதுயர்ந்த

           

பட்டுத்  துகிற்கொடியில்  பறித்து  எடுத்ததுவோ !

…….பைங்கொடியாள்  நின்புருவம் ? பவளத்துப் பாறைதனில்,

வெட்டி எடுத்ததுவோ  வேல்விழியாள் நின்னிதழ்கள் ?

…….வெள்ளை நறுமுல்லை  வெட்கித் தலைகுனிய,

           

முத்து  மணிகொண்டு  கோத்ததுவோ பல்வரிசை ?

…….முக்கனியின்  சாறெடுத்து ஆக்கியதோ  கன்னங்கள் ?

கத்து  கடலனையக்  காட்சிதரும்  கருங்கூந்தல்,

…….கார்முகிலின்  சொத்தலவோ ? காரிகைநீ  கொண்டதுஏன் ?

           

தேன்கதலித்  தண்டினிலே  வடித்ததுவோ நின்மேனி ?

…….தீங்கரும்புத்  துண்டாமோ  சேயிழையாள்  நின்கரங்கள் ?

அன்னத்தின் சிறகெடுத்து ஆக்கியதோ  சீரடிகள் ?

…….அஞ்சுகமும் பூங்குயிலும்  அடைக்கலமோ  நின்னிடமே ?

           

பொதியமலைத்  தென்றலிடைப் பூங்கொடிகள் ஆடுதல்போல்,

…….புன்னகையின்  ஆட்சிதனில்  பொன்மலர்நீ  ஆடுதலால்,

மதுவூறும்  மாமலரே !  மான்மறியே !  பூம்பொழிலே !

…….மல்லிகையே ! இன்றுமுதல்  பூங்கொடியே நின்பெயராம் !

           

பூங்கொடியே  நீவாழ்க !!  நின்முறுவல்  நனிவாழ்க !

…….பொன்மணியே நீவாழ்க ! நின்மனைவாழ்க ! வாழியவே !

 

---------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 10]

 {24-05-2022}

 ---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக