என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 30 மே, 2022

பாடல் (34) (1970) செம்பரிதி மேலையாழி நீரிலாடும் நேரம் !

-----------------------------------------------------------------------------------------

 

புதுக்கோட்டை நண்பர் வில்லியம் கிராசுக்கு

ஏற்பட்ட துய்ப்பு பற்றி  அவருக்காக எழுதப்பட்ட

ஒரு கவிதை !

(ஆண்டு 1970)

-----------------------------------------------------------------------------------------

 

செம்பரிதி       மேலையாழி   நீரிலாடும்     நேரம்

…..சிந்தனையில்   மனமுழல   மலைச்சாரல்  சென்றேன் !

அம்புலியின்     வடிவாக      அவளங்கு     வந்தாள் !

…..ஆவலுடன்     கைப்பற்றி    முகம்பார்த்து நின்றேன் !

மைவிழிகள்     கண்ணீரில்    உறவாட       நின்றாள் !

…..மனம்வாடும்   காணமென் ?    விளம்பிடுக   என்றேன்!

கைவிரலில்     முகம்பொத்தி  சிரந்தாழ       நின்றாள் !

…..கவலையுடன்   முகம்பற்றி    ஏனென்று    கேட்டேன் !

கனலாக,             எனைவிட்டுக்  கரந்ததேன் ?      என்றாள்

…..எண்ணங்கள்   அலைமோத   இமைமூடி   நின்றேன் !

என்வாழ்வு     மனமேடைச்  சதிராடக்     கண்டேன் !

 

பெறுகவென     உயர்பதவி    அரசினரும்     தந்தார் !

…..பெருமையுடன்   உளம்மகிழ  புதுகைநகர்  வந்தேன் !

நறுமலரின்      சீர்த்தஉளம்    நலமழிய      எண்ணம்,

…..நலிவடைய   புதியபல  படிப்பினைகள் கொண்டேன் !

பழகுதற்கு       உரிமையுடன்  அணுகியவர்   இல்லை !

…..அணிமிகுந்து  வானுயர்ந்த  மாளிகைகள்  கண்டேன் !

அன்புடனே    உறவுகொள்ள  விழைந்தவர்கள் இல்லை !

…..உணவுதேடி    நாடிபல    விடுதிகளைக்   கண்டேன் !

உவப்புடனே    அளிப்பதற்கு  முன்வருவார்   இல்லை !

…..பணத்தினையே  பெரிதுஎன   மதிப்பவர்கள்  கண்டேன் !

பண்புதனில்     இனியவரைப்  போற்றிடுவார்  இல்லை !

 

வழிமறைந்து  நிலைகுலைந்து  உளம்வருந்த   நின்றேன் !

.....வாரிபோல்   ஆங்கொருதாய்  துயர்விலக்க  வந்தாள் !

விழிதனிலே      அருளுடனே      உணவுண்ணத்    தந்தாள் !

.....விருப்புடனே   அதையுண்டு        நலம்பேணி       வந்தேன் !

அன்புதனை      விழியிலேந்தி    தங்கையவள்    வந்தாள் !

.....அவளோடு      உறவாடி            இதயத்தை       வென்றேன் !

கன்னிப்பூ      அவளெந்தன்   உளந்தன்னைக் கொண்டாள் !

.....கவடின்றி       அன்போடு          ஒருபாதை       நின்றோம் !

அயலார்கள்      பழிகூற           வழிமீது           வந்தார் !

.....அஞ்சாது        எதிர்நின்று         போராடி         வென்றோம் !

வெயிலாகச்      சிலபேர்கள்       எமைச்சாடி       வந்தார் !

.....விரிவாகச்    சொன்னோம்பின்   வழிமாறிச்    சென்றார் !

       

எதிர்போகிப்      புறங்கூறும்       இழிவான         சிலபேர்

.....இடையூறு         விளைவிக்க         வழிதேடி            வந்தார் !

சதிகாரர்          மறைவாகப்      பலவின்னல்      செய்தார் !

.....சாய்க்கடை      மொழிபேசி         வசைபாடி          வந்தார் !

உயிரான          உறவுக்குப்        பழிசூழச்          செய்தார் !

.....உண்மைக்குத்    திரையிட்டு  விளங்காமல்     செய்தார் !

பயிரான     பெண்மைக்குக்   களங்கத்தைப்    பெய்தார் !

.....பாவமென்       உயிர்த்தங்கை    மனம்வாடி        நின்றாள் !

சொல்லுதற்கு    இயலாத          சூழலால்         தீயோர்,

.....சொல்மிக்க      மதிப்பெய்த        உயர்வாகி      நின்றார் !

புல்லிற்கு      இணைசெல்லும்  புலையர்தம்      கூற்றால்,

.....பொய்யென்ற     தீயால்மெய்     புகையாகச்      செய்தார் !

       

தங்கைக்கு       இடையூறு        தவிர்க்கின்ற      நோக்கில்,

.....தடம்மாறி       மறைவாக         இடந்தேடி          வந்தேன் !

மங்கையின்      உளம்பூத்த        மாசற்ற           நட்பின்

.....மாண்பினை     உணராத           மதிகெட்ட         உலகம் !

கயமையே        உருவாகப்        பணம்தேடும்      மாந்தர் !

.....கரவாமல்         மெய்பேசத்       தடுமாறும்          சுற்றம் !

பயம்மிக்க        உணர்வோடு      மனம்வாடும்      பெண்டிர் !

.....பலவுமென்       உள்ளத்தில்       பகடையாய்ச்       சூழ,

வெறுப்புற்று      வழிமாறி         வெளியேறி       வந்தேன் !

.....விழிமீது           நீரேந்தி         அவள்நொந்து      நின்றாள் !

அறுபட்ட         கொடியாக        உயிர்வாடி        நொந்தேன் !

.....ஐந்தாறு           நாளாக          எனைத்தேடி        நின்றாள் !

 

உறுதிக்கு         இடந்தந்து        மறைவாக        வாழ்ந்தேன் !

.....உள்ளத்தில்      அவள்வந்து      உறவாடி           நின்றாள் !

மறுத்துள்ளம்     இளைப்பாற      மலைச்சாரல்     சென்றேன் !

.....மனம்நொந்த     என்தங்கை       அழுதங்கு         நின்றாள் !

துயருக்குப்       பொருள்கேட்டு   முகம்பார்த்து     நின்றேன் !

.....உயிருக்கு        முடிவெய்த       வழிகூறச்        சொன்னாள் !

உயர்வான        நெஞ்சத்தை      உணராத          உலகில்

.....உயிர்வாழ்ந்து    பயனென்ன ?      உரையீரோ       என்றாள் !

அன்பிற்குத்       தடையிட்டு       அணைபோட     உலகில்,

.....அரணேது ?      அறியாது !        இன்றிந்த         உலகம் !

என்பற்ற          நாவின்று         பலவாறு          பேசும் !

.....எதற்காகப்     பிரிந்தென்னை   மறைவாக   வேண்டும் ?

 

முன்னைப்போல்  அன்போடு   உறவாடி    வாழ்வோம்!

.....முரணுற்று      மறைவாக        வாழாதீர் !          என்றாள் !

அறிவிற்கு       ஒளியூட்டி        வழிகாட்டி           நின்றாள் !

.....அழுக்காறு       மிகுந்தோரின்    விழிப்பார்வை      அஞ்சி,

அன்பிற்குத்       திரையிட்டு       உயிர்வாழ்தல்   வாழ்வா ?

.....குழப்பங்கள்   தெளிவுற்றுக்   கரம்பற்றிக்  கொண்டோம் !

கொடுமைக்கு  முடிவெய்த சூள்கொண்டோம் ! வெல்வோம் !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

 {30-05-2022}

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக