-----------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை நண்பர் வில்லியம் கிராசுக்கு
ஏற்பட்ட துய்ப்பு பற்றி
அவருக்காக எழுதப்பட்ட
ஒரு கவிதை !
(ஆண்டு 1970)
-----------------------------------------------------------------------------------------
செம்பரிதி மேலையாழி
நீரிலாடும் நேரம்
…..சிந்தனையில் மனமுழல மலைச்சாரல்
சென்றேன் !
அம்புலியின் வடிவாக
அவளங்கு வந்தாள் !
…..ஆவலுடன் கைப்பற்றி முகம்பார்த்து நின்றேன் !
மைவிழிகள் கண்ணீரில் உறவாட
நின்றாள் !
…..மனம்வாடும் காணமென் ? விளம்பிடுக என்றேன்!
கைவிரலில் முகம்பொத்தி சிரந்தாழ
நின்றாள் !
…..கவலையுடன் முகம்பற்றி ஏனென்று கேட்டேன் !
கனலாக, எனைவிட்டுக் கரந்ததேன் ? என்றாள்
…..எண்ணங்கள் அலைமோத இமைமூடி
நின்றேன் !
என்வாழ்வு மனமேடைச் சதிராடக்
கண்டேன் !
பெறுகவென உயர்பதவி அரசினரும் தந்தார் !
…..பெருமையுடன் உளம்மகிழ புதுகைநகர் வந்தேன் !
நறுமலரின் சீர்த்தஉளம் நலமழிய
எண்ணம்,
…..நலிவடைய புதியபல படிப்பினைகள் கொண்டேன் !
பழகுதற்கு உரிமையுடன் அணுகியவர்
இல்லை !
…..அணிமிகுந்து வானுயர்ந்த மாளிகைகள் கண்டேன் !
அன்புடனே உறவுகொள்ள விழைந்தவர்கள் இல்லை !
…..உணவுதேடி நாடிபல விடுதிகளைக் கண்டேன் !
உவப்புடனே அளிப்பதற்கு முன்வருவார்
இல்லை !
…..பணத்தினையே பெரிதுஎன மதிப்பவர்கள் கண்டேன் !
பண்புதனில் இனியவரைப் போற்றிடுவார்
இல்லை !
வழிமறைந்து நிலைகுலைந்து உளம்வருந்த நின்றேன் !
.....வாரிபோல் ஆங்கொருதாய்
துயர்விலக்க வந்தாள் !
விழிதனிலே அருளுடனே உணவுண்ணத் தந்தாள் !
.....விருப்புடனே அதையுண்டு நலம்பேணி வந்தேன் !
அன்புதனை
விழியிலேந்தி தங்கையவள் வந்தாள் !
.....அவளோடு உறவாடி இதயத்தை வென்றேன் !
கன்னிப்பூ
அவளெந்தன் உளந்தன்னைக் கொண்டாள் !
.....கவடின்றி அன்போடு ஒருபாதை நின்றோம் !
அயலார்கள் பழிகூற வழிமீது வந்தார் !
.....அஞ்சாது
எதிர்நின்று போராடி வென்றோம் !
வெயிலாகச்
சிலபேர்கள் எமைச்சாடி வந்தார் !
.....விரிவாகச் சொன்னோம்பின் வழிமாறிச் சென்றார் !
எதிர்போகிப் புறங்கூறும் இழிவான சிலபேர்
.....இடையூறு விளைவிக்க வழிதேடி வந்தார் !
சதிகாரர்
மறைவாகப் பலவின்னல் செய்தார் !
.....சாய்க்கடை மொழிபேசி வசைபாடி வந்தார் !
உயிரான
உறவுக்குப் பழிசூழச் செய்தார் !
.....உண்மைக்குத்
திரையிட்டு விளங்காமல் செய்தார் !
பயிரான பெண்மைக்குக் களங்கத்தைப் பெய்தார் !
.....பாவமென்
உயிர்த்தங்கை மனம்வாடி நின்றாள் !
சொல்லுதற்கு இயலாத சூழலால் தீயோர்,
.....சொல்மிக்க
மதிப்பெய்த உயர்வாகி நின்றார் !
புல்லிற்கு இணைசெல்லும் புலையர்தம்
கூற்றால்,
.....பொய்யென்ற
தீயால்மெய் புகையாகச் செய்தார் !
தங்கைக்கு இடையூறு தவிர்க்கின்ற நோக்கில்,
.....தடம்மாறி மறைவாக இடந்தேடி வந்தேன் !
மங்கையின்
உளம்பூத்த மாசற்ற நட்பின்
.....மாண்பினை உணராத மதிகெட்ட உலகம் !
கயமையே உருவாகப் பணம்தேடும் மாந்தர் !
.....கரவாமல்
மெய்பேசத் தடுமாறும் சுற்றம் !
பயம்மிக்க உணர்வோடு
மனம்வாடும் பெண்டிர் !
.....பலவுமென்
உள்ளத்தில் பகடையாய்ச் சூழ,
வெறுப்புற்று
வழிமாறி வெளியேறி வந்தேன் !
.....விழிமீது
நீரேந்தி அவள்நொந்து நின்றாள் !
அறுபட்ட கொடியாக உயிர்வாடி நொந்தேன் !
.....ஐந்தாறு நாளாக எனைத்தேடி நின்றாள் !
உறுதிக்கு இடந்தந்து மறைவாக வாழ்ந்தேன் !
.....உள்ளத்தில் அவள்வந்து உறவாடி நின்றாள் !
மறுத்துள்ளம்
இளைப்பாற மலைச்சாரல் சென்றேன் !
.....மனம்நொந்த என்தங்கை அழுதங்கு நின்றாள் !
துயருக்குப்
பொருள்கேட்டு முகம்பார்த்து நின்றேன் !
.....உயிருக்கு
முடிவெய்த வழிகூறச் சொன்னாள் !
உயர்வான
நெஞ்சத்தை உணராத உலகில்
.....உயிர்வாழ்ந்து பயனென்ன ? உரையீரோ என்றாள் !
அன்பிற்குத்
தடையிட்டு அணைபோட உலகில்,
.....அரணேது ? அறியாது !
இன்றிந்த உலகம் !
என்பற்ற
நாவின்று பலவாறு பேசும் !
.....எதற்காகப் பிரிந்தென்னை மறைவாக வேண்டும் ?
முன்னைப்போல் அன்போடு உறவாடி வாழ்வோம்!
.....முரணுற்று மறைவாக வாழாதீர் ! என்றாள் !
அறிவிற்கு
ஒளியூட்டி வழிகாட்டி நின்றாள் !
.....அழுக்காறு மிகுந்தோரின் விழிப்பார்வை அஞ்சி,
அன்பிற்குத்
திரையிட்டு உயிர்வாழ்தல் வாழ்வா ?
.....குழப்பங்கள் தெளிவுற்றுக் கரம்பற்றிக் கொண்டோம் !
கொடுமைக்கு முடிவெய்த
சூள்கொண்டோம் ! வெல்வோம் !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக