என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

பாடல் (36) (1970) என்னருமைக் காதலியே ! ஏந்திழையே ! மாந்தளிரே !

---------------------------------------------------------------------------------------

 

குறிஞ்சி மலர் திங்களேடு அறிவித்த படத்துக்குப் பாடல்

போட்டிக்காக, அவ்வேட்டில் வெளியிடப்பெற்ற படத்தை வைத்து

எழுதி  அனுப்பிய கவிதை !

(ஆண்டு 1970)

 ---------------------------------------------------------------------------------------

 

என்னருமைக் காதலியே !    ஏந்திழையே ! மாந்தளிரே !

இன்பப்       புனலூற்றே !   இன்னமுதே ! பூங்குயிலே !

அன்னமே !   அஞ்சுகமே !     ஆழிவிளை    நன்முத்தே !

அன்புப்       பாலூட்டும்      அழகுதமிழ்ப்  பூங்கொடியே !

உன்வதனம்   வானகத்தில்   ஒளிவீசும்     நிலவாமோ ?

ஒற்றைக்     கொடிப்புருவம் மன்மதனின்   வில்லாமோ ?

கன்னங்கள்    தேன்குடமோ ?   கருநாவல்    நின்விழியோ ?

கற்கண்டுப்    படிகந்தான்    காரிகையுன்    பல்வரியோ ?

கருவுற்ற     கொண்டல்தான் கார்குழலோ ?   காதுமடல்

கண்கவரும்   குறிஞ்சிப்பூ     கதைகூறும்   காவியமோ ?

அருஞ்சுவைப்   பலச்சுளையில் ஆக்கியதோ   செவ்விதழ்கள் ?

ஆரணங்கு     நின்கழுத்து     அழகுமயில்   சீர்தனமோ ?

கரும்புக்       கரமிரண்டில்    காந்தளேன்    பூத்ததடி ?

கடல்நுரையும் சந்தனமும்     கலந்ததுவோ   மேனியடி ?

வேழத்தின்    மருப்பாமோ    வேய்ங்குழல்   நின்கால்கள் ?

வெண்கதலித்  தண்டோ       வெள்ளரியோ  நின்கரங்கள் ?

காழகமும்     நாணுகின்ற    கட்டழகி      நின்னடிதான் ,

தாழம்பூ       மடலோ ! என்  தங்கமணிக்   கோபுரமே !

தமிழே !       தமிழ்தந்த      தாரகையே !  வாழியவே !

அழகுமிகு     அம்புலியே !    ஆயிழையே ! வாழியவே !

அமுதம்       நிகர்த்தவளே !  ஆருயிரே !   வாழியவே !

 

 

----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

 {31-05-2022}

 ---------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக